பாலியல் வழக்கு: ராஜகோபாலனை  3 நாட்கள் காவலில் விசாரிக்க  போக்சோ நீதிமன்றம் உத்தரவு

by Editor / 01-06-2021 04:25:28pm
 பாலியல் வழக்கு: ராஜகோபாலனை  3 நாட்கள் காவலில் விசாரிக்க  போக்சோ நீதிமன்றம் உத்தரவு



பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், ஆசிரியர் ராஜகோபாலனை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கே.கே.நகரில் உள்ள தனியார் பள்ளியொன்றில், 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு வணிகவியல் ஆசிரியராக இருந்தவர் ராஜகோபாலன். இவர் அங்கு பயின்ற மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் கைது செய்யப்பட்டார். 2016-ம் ஆண்டில் 12-ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் ராஜகோபாலன் கடந்த 24ஆம் தேதி கைதானார்.
இந்த நிலையில், ராஜகோபாலன் ஜாமீன் கோரி சென்னை போக்சோ நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதேபோல், காவல்துறை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்தது.
இந்த இரண்டு மனுக்களும் நீதிபதி முகமது பரூக் முன்பு  விசாரணைக்கு வந்தது. ஜாமீன் மனு குறித்து காவல்துறை பதில் அளிக்க உத்தரவிட்டு, வழக்கை வரும் 3 ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.
அதேபோல், ராஜகோபாலனைக் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிய காவல்துறையின் மனு மீதான விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.அதன்படி, இந்த வழக்கு  விசாரணைக்கு வந்தது. நீதிபதி முகமது பரூக் முன்பு ராஜகோபாலனைக் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். இதையடுத்து, ராஜகோபாலனை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்த நீதிபதி, ஜூன் 4 ஆம் தேதி, மாலை 3 மணிக்கு மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

 

Tags :

Share via