கருட புராண தண்டனையில் இருந்து தப்பிக்க வழிபடுவோம்

by Editor / 06-08-2022 09:51:16am
கருட புராண தண்டனையில் இருந்து தப்பிக்க வழிபடுவோம்

நம் வழிபாடுகளில், கருடரும் முக்கியத்துவம் வாய்ந்தவர். நாகரும் வணங்குதலுக்கு உரியவர். பாம்புப் புற்றுக்கு பால் வழங்கி வேண்டிக் கொள்வோம். புற்றினை வலம் வந்து பிரார்த்தனை செய்துகொள்வோம். சிவபெருமான், தன் கழுத்தில் பாம்பைச் சுற்றிக்கொண்டிருக்கிறார். பிள்ளையார் இடுப்பில் பாம்பையே அணிந்துகொண்டிருக்கிறார். அம்பாளின் சிரசில் நாகபீடமாக இருந்து சிரசின் மேல் குடையெனத் திகழும் பாம்பைக் காணலாம். மகாவிஷ்ணு, பாம்புப்படுக்கையில்தான் படுத்துக்கொண்டு, மொத்த உலகத்தையும் ரட்சிக்கிறார்.

நவக்கிரகங்களிலும் இரண்டு கிரகங்கள் பாம்பு கிரகங்களாகவே அமைந்திருக்கின்றன. உடலின் மூலாதார சக்தி, குண்டலினி சக்தி என்பதெல்லாமும் ஒரு பாம்பு போல் சுற்றிக்கொண்டிருக்கிறது என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

ஜாதகத்தில், கால சர்ப்ப தோஷம், சர்ப்ப தோஷம் இருப்பதுதான் வாழ்க்கைக்கு தடை என்று விவரிக்கிறது ஜோதிட சாஸ்திரம். அரசமரமும் ஆன்மிகத்திலும் விஞ்ஞானத்திலும் முக்கியத்துவம் பெறுகின்றன. பல ஊர்களில் அரசமரத்தின் கீழே, நாகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. நாகர்கோவிலுக்கு அந்தப் பெயர் அமைவதற்குக் காரணமே நாகநாதர் கோயில் கொண்டிருப்பதுதான்.

நாம் வாழும் உலகம் பூலோகம். பூலோகத்துக்குக் கீழே இருப்பதுதான் நாக லோகம். பூமிக்குக் கீழே இருக்கும் நாகலோகத்திலுள்ள நாகங்களுக்கு பால் விடுவதும் ஆராதிப்பதும் முக்கிய தோஷங்களையெல்லாம் போக்கும் என்கிறது சாஸ்திரம். அதேபோல் நம் தலைக்கு மேலே இருப்பது ஆகாயம். அந்த வானத்தில் பறப்பது கருடர். பறவைகளின் ராஜா கருடர்தான்.

கருடாழ்வார்

ஆடி மாதத்தில் வளர்பிறை சதுர்த்தி நாளில் வருவது நாக சதுர்த்தி.  ஆகஸ்ட் 1ம் தேதி திங்கட்கிழமை நாக சதுர்த்தி. இந்தநாளில், நாகர் வழிபாடு செய்கிறோம். புற்றுக்கு பாலிடுகிறோம். ஏழு தலைமுறை தோஷங்களையும் போக்கவல்லது இந்தப் பிரார்த்தனை! 

சதுர்த்திக்கு அடுத்த நாள் பஞ்சமி. ஆடி மாதத்தில் நாக சதுர்த்திக்கு அடுத்தநாள் கருட பஞ்சமி. கருடரை ஆராதிக்கும் நாள். அதாவது பூமிக்குக் கீழே உள்ள நாகங்களை வழிபடும் நாள் நாக சதுர்த்தி. வானில் பறக்கக் கூடிய கருடனை வணங்கும் நாள், கருட பஞ்சமி. .

தெருவில் நடந்து போய்க்கொண்டிருக்கும் போது, கருடன் பறப்பதைப் பார்த்தால், உடனே காலில் செருப்பைக் கழற்றிவிட்டு, அண்ணாந்து கருடப் பறவையைப் பார்த்து, ‘கருடா... கருடா...’ என்று சொல்லி வணங்கி, கன்னத்தில் போட்டுக்கொள்வோம்.

கருடாழ்வார்

கருடன் என்பது சாதாரணப் பறவை அல்ல. மகாவிஷ்ணுவின் வாகனம். திருமாலின் வாயிற்காப்பாளன். கருடனின் பார்வை கிடைத்துவிட்டாலே, நம்மில் பாதி பாவங்கள் தொலைந்துவிடும். தோஷங்கள் அனைத்தும் விலகிவிடும் என்று கருடனுக்கு அத்தனை சக்திகளை அருளியிருக்கிறார் மகாவிஷ்ணு. அதனால்தான், கருடனை ஆழ்வார் எனும் திருநாமம் சேர்த்து, கருடாழ்வார் என்று போற்றுகிறது புராணம். அதனால்தான், எல்லா வைணவக் கோயில்களிலும் பெருமாள் சந்நிதிக்கு எதிரே, தன் தலைவனான பெருமாளை வணங்கியபடியே, கைக்கூப்பியபடியே நிற்கும் கருடாழ்வார் சந்நிதி அமைந்திக்கிறது. 

கருடன் சக்தி வாய்ந்த பறவை. கருடாழ்வார் அளப்பரிய ஆற்றலும் சக்தியும் வழங்குபவர். அதனால்தான் ஆடி மாதத்தின் வளர்பிறை பஞ்சமி, கருட பஞ்சமி என்று போற்றப்படுகிறது. இந்தநாள், கருடாழ்வாருக்கு உகந்தநாளாகக் கொண்டாடப்படுகிறது.

ஆகஸ்ட் 2ம் தேதி, கருட பஞ்சமி. நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்கிற பாவங்களுக்கெல்லாம் தவறுக்கெல்லாம் கருட புராணத்தில் தண்டனை குறிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள் ஆச்சார்யர்கள். ஆகவே, கருடருக்கு உரிய இந்தநாளில், மகாவிஷ்ணுவின் திருவடிகளையும் அவரின் சந்நிதிக்கு எதிரே காட்சி தரும் கருடாழ்வாரையும் ஆத்மார்த்தமாக வணங்குவோம். விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்வோம். சகல தோஷங்களும் விலகும். சந்தோஷங்கள் பெருகும்.


*கருட காயத்திரி மந்திரம்:*

ஓம் தத்புருஷாய வித்மஹே
ஸூவர்ண பட்சாய தீமஹி
தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்!

 

Tags :

Share via