இந்திய பவுலர்களை பாராட்டிய விராட் கோலி

by Editor / 15-06-2021 08:21:16am
இந்திய பவுலர்களை பாராட்டிய  விராட் கோலி

ஒவ்வொரு நாளும் இவர்கள் இருவரும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் எனக் கூறி வேகப்பந்துவீச்சாளர்கள் இஷாந்த் சர்மா, முகமது சிராஜை பாராட்டி இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

உலக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் உச்சத்தில் இருக்கும் இரு அணிகளான நியூசிலாந்து - இந்தியா, ஐசிசி முதல் முறையாக நடத்தும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் களம் காண்கிறது. இங்கிலாந்தின், சவுத்தாம்படன் நகரில் இருக்கும் ரோஸ் பவுல் கிரிக்கெட் மைதானத்தில் ஜூன் 18 முதல் 22 ஆம் தேதி வரை இந்த இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இதற்காக இந்திய அணி தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நியூசிலாந்து கிரிக்கெட் அணி இங்கிலாந்தை வீழ்த்திய உற்சாகத்தில் களம் காண்கிறது.

இந்திய அணி இரு அணிகளாக பிரிந்து தங்களுக்குள் 3 நாள் பயிற்சி ஆட்டத்தை விளையாடியது. அதில் சுப்மன் கில், ரிஷப் பன், ஜடேஜா, இஷாந்த் சர்மா, முகமது சிராஜ் என பலரும் நன்றாக விளையாடினர். நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இஷாந்த் சர்மா அல்லது சிராஜ் சேர்க்கப்படுவாரா என்ற விவாதம் தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது. பலரும் இருவருக்கும் ஆதரவு தெரிவித்தனர். பயிற்சி ஆட்டத்திலும் இருவரும் நன்றாகவே விளையாடினார்கள்.

இந்நிலையில் விராட் கோலி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்தை பகிர்ந்து "இந்த வேகப்பந்துவீச்சாளர்கள் ஒவ்வொரு நாளும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்" என்று சிராஜ் மற்றும் இஷாந்த் சர்மாவுடன் தான் செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இருவரும் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via