வெளிநாட்டில் வாழும் இலங்கைத் தமிழரின் ஓர் ஏக்கம்

by Admin / 26-04-2023 10:37:14am
வெளிநாட்டில் வாழும் இலங்கைத் தமிழரின் ஓர் ஏக்கம்

தாய் மண்

எனக்கும் இந்த மண்ணுக்குமான உறவு என் தாய் தந்தது

அவள் மசக்கை பொழுதில் ருசித்து ருசித்து தின்ற தான் அது என் தாய் மண்ணாயிற்று

தொப்புள் கொடி வழி அவள் கரைத்து விட்ட மண்ணீர். என் மார்பு கூட்டுக்குள் உயிர் தண்ணியாய் பாய்ந்து

என் உடலை உணர்வை வளர்த்தது

இப்பொழுது எப்படி என்னையும் இந்த மண்ணையும் பிரித்து விட இயலும்

ஒரு கைப்பிடி அளவு மண் எனக்கு சொந்தமில்லை என்றாலும்

சொந்தமண் தாய் மண் எப்படி எனக்கு அன்னியமாகும்

பிடுங்கி நட்ட நாத்தாய் வேறு இடத்தில் வாழ்ந்தாலும்

என் மண்ணோட வாசம் இன்னும் என் நுரையீரலை மலர்வித்துக் கொண்டிருக்கிறது

துப்பாக்கி குண்டுகளுக்கு அச்சப்பட்டு நாங்கள் புலம்பேறவில்லை

புலராத தமிழர் வாழ்வு புலரும் காலம் வரும் என்றுதான் விடியா பொழுதில் கருங்கடலில் பயணப்பபட்டோம்.

அலைகளின் நடுவில் தத்தளிக்கும் படகு போலவே எங்கள் வாழ்வும் கண்ணீரில் தள்ளாட

நெல்லிமர முற்றத்தில் நின்றாடும் சிட்டும்

துள்ளித் திரிந்த அணிலும் நெஞ்சில் வருடிய காட்சி கிடக்கிறது, புகைபிடித்த ஓவியமாய்

மார்கழி மாதத்தில் பனித்துளியில் முகம் பார்க்கும் சூரியன்

சாணி உருண்டை மீது சொருகிய பூசணிப்பூ குத்து காலிட்டு மஞ்சள் வைரமாய் உட்கார்ந்து இருக்க

காணாமல் போகும் நீர் துளிகள் ;எங்கள் கனவுகள் போலவே

பூவரச மரத்தில் சாய்ந்த கிளையில் கட்டிய ஊஞ்சலில் ஊசலாடுது உள்ளம்

தரை மிதித்து எம்பி மேலே போகையிலே எழுதும் சந்தோசத்தில்

என் வாழ்வும் உயரே போகாதா என்ற கனவு இன்னும் மிச்சம் இருக்கிறது.

தாமரை பூ குளத்தில் அல்லி மொட்டு பறிக்க

இறங்கி நீரள்ளி இலையில் விட

உருண்டோடும் பாதரசநீர்

உள்ளத்தை கொள்ளை கொள்ளும் அழகு இருக்கிறதே ஆசையாக இருக்கிறது

என் மண்ணை பார்க்க......

சுதந்திர நம்பிக்கை....

தர தட்டிய கப்பல் போல ஆயிற்று.

கிழக்கில் விடிந்த கதிரவன் எங்கள் வானில் மட்டும் ஏன் அஸ்தமித்து போனது.

30 ஆண்டு ரத்த வாசம் மூச்சு அறுக்கிறது.

எங்கள் மண்ணோடான உறவையும் தான்.

என் தாய் மண்ணில் மீண்டும் நாங்கள் வாழ்வோமா

எங்கள் பிள்ளைகளுக்கு என் நாடு தாய் நாடாகுமா?

கனவுகள் பூத்துக் கொண்டே இருக்கின்றன...

-.கவிஞா்.பொதிகைத்தமிழரசன் நூலிலிருந்து   பதிவு 2009

வெளிநாட்டில் வாழும் இலங்கைத் தமிழரின் ஓர் ஏக்கம்
 

Tags :

Share via