லாரி மீது பைக் மோதல் - 2 பேர் பலி:கோவில்பட்டி அருகே பரிதாபம்.

by Editor / 24-05-2023 09:52:54am
லாரி மீது பைக் மோதல் - 2 பேர் பலி:கோவில்பட்டி அருகே பரிதாபம்.

கோவில்பட்டி அருகே பழுதாகி நின்று கொண்டிருந்த லாரி மீது பைக் மோதிய விபத்தில் 2பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கூசாலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரது  மகன்  அன்பரசன் (27), ஏசி மெக்கானிக் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.  இவரும் புளியங்குளத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர் மகன் கேசவன் (26) என்பவருடன் பைக்கில் நெல்லை சென்றதாக கூறப்படுகிறது.

அங்கு பணிகளை முடித்துவிட்டு இருவரும் பைக்கில் ஊருக்கு திரும்பி உள்ளனர். கோவில்பட்டி அருகே இனாம்மணியாச்சி அடுத்த பெத்தேல் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது, சாலையில் டயர் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரி மீது பைக் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சம்பவ இடத்தில் அன்பரசன், கேசவன் இருவரும் பலத்த காயம் அடைந்து உயிரிழந்தனர்.  லாரி நெல்லையில் இருந்து சாத்தூருக்கு அட்டை  கழிவுகளை ஏற்றி சென்றதாக தெரிகிறது. 

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

 

Tags :

Share via