மீன்வள மசோதாவை திரும்பப்பெறாவிட்டால் போராட்டம் -வேல்முருகன்

by Editor / 18-07-2021 08:12:48pm
மீன்வள மசோதாவை திரும்பப்பெறாவிட்டால் போராட்டம் -வேல்முருகன்

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்.இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

''மீனவர்களுக்கு எதிரான தேசிய கடல் மீன்வள ஒழுங்கு முறை மற்றும் மேலாண்மை வரைவுச் சட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என தெரிவித்துக்கொள்கிறேன்.

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரில், தேசிய மீன்வள ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை வரைவுச் சட்டத்தை கொண்டு வரும் ஆயுத்தப் பணிகளில் ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளது.

இந்த தேசிய கடல் மீன்வள ஒழுங்கு முறை மற்றும் மேலாண்மை வரைவு சட்டத்தின் வாயிலாக படகின் நீளத்தை அதிகரிக்க கூடாது, இன்ஜினின் பவரை அதிகரிக்க கூடாது என ஏராளமான கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இச்சட்டத்தை நிறைவேற்றினால், விசைப் படகுகளின் திறன் மட்டுப்படுத்தப்படும். இதனால் எதிர்காலத்தில் ஆழ்கடல் மீன்பிடி தொழில் நசிந்து போகும் அபாயம் உள்ளது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி சுட்டிக்காட்டுகிறது.

தேசிய கடல் மீன் வள ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை வரைவு சட்டம் நிறைவேற்றப்படுமானால், சாதாரண கட்டுமரங்கள், பாய்மரப் படகுகள், வெளியில் இயந்திரம் பொருத்தி இயக்கும் வள்ளங்கள், கனரக இயந்திரங்கள் பொருத்தி இயக்கப்படும் விசைப்படகுகள் உள்ளிட்டவைகள் வணிகக் கப்பல்கள் சட்டம் 1958 இன் கீழ் பதிவு செய்யவேண்டும். நூறுக்கு மேற்பட்ட கப்பல்கள் வைத்திருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களும், ஒரே ஒரு கட்டு மரம் வைத்திருக்கும் எளிய மீனவனும், ஒரே மாதிரியான முதலாளிகள் என்று இச்சட்டம் கூறுகிறது.

இதன் காரணமாகவே , தேசிய கடல் மீன் வள ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை வரைவுச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுகின்றன.

ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத ஒன்றிய அரசு, மாநில அரசின் உரிமையை பறிக்கும் வகையில் இச்சட்டத்தை நிறைவேற்ற தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த சட்டம் குறித்த கருத்து கேட்புக் கூட்டங்களை கூட முறையாக நடத்த முன்வராத ஒன்றிய அரசு, மீனவர்களின் சிக்கல்களை காது கொடுத்துக் கேட்க தயாராக இல்லை எனவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி குற்றம் சாட்டுகிறது.மீனவர்களின் படகின் நீளம் 24 மீட்டர் தான் இருக்க வேண்டுமென அறிவுறுத்தி வரும் ஒன்றிய அரசு, கார்ப்பரேட் நிறுவனங்களில் கப்பல்களின் நீளத்தை கணக்கில் கொள்ளாமல் இருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

தேசிய கடல் மீன்வள ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை வரைவு சட்டம் என்பது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவானது என்றும் மீனவர்களின் வாழ்க்கையை பாதிக்கும் எனவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி எடுத்துரைக்கிறது.எனவே தேசிய கடல் மீன்வள ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை வரைவு சட்டத்தை திரும்பப் பெறாவிட்டால், மீனவர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழக மக்களையும் திரட்டி தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என தெரிவித்துக்கொள்கிறேன்.

கேரளா, ஆந்திரா மற்றும் பாஜக ஆளக் கூடிய கர்நாடகா குஜராத் ஆகிய மாநிலங்களைப் போன்று தமிழ்நாடு அரசும், தேசிய கடல் மீன்வள ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை வரைவு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.''

 

Tags :

Share via