திண்டுக்கல் பஸ் நிலையத்தில் பணம் பறிக்கும் முயற்சியில் முதியவர் அடித்து கொலை

by Admin / 29-07-2021 02:20:08pm
திண்டுக்கல் பஸ் நிலையத்தில் பணம் பறிக்கும் முயற்சியில் முதியவர் அடித்து கொலை


   
திண்டுக்கல் பஸ் நிலையத்தில் இன்று அதிகாலை பணம் பறிக்கும் முயற்சியில் முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் பஸ் நிலையத்தில் விரிவாக்கம் செய்யப்பட்ட வணிக வளாகம் இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. இங்கு ஏராளமான ஆதரவற்றோர் தங்கி இளைப்பாறி வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் இங்கேயே தூங்கி விடுகின்றனர்.
 
பஸ் நிலையத்தில் மது மற்றும் கஞ்சா போதையுடன் சுற்றி வரும் நபர்கள் இது போன்ற நபர்களை மிரட்டி பணத்தை பறித்து செல்வது அடிக்கடி நடந்து வருகிறது. பிச்சைக்காரர்களையும் விட்டு வைக்காமல் வழிப்பறி கும்பல் கத்தியை காட்டி பணம் பறித்து சென்று விடுகின்றனர்.

அதே போல் சுமார் 50 வயது மதிக்கத்தக்க முதியவர் கரூர் பஸ் நிறுத்தம் அருகே தூங்கிக் கொண்டு இருந்த போது ஒரு கும்பல் அவரை மிரட்டி பணம் கேட்டுள்ளனர். அவர் பணம் தர மறுக்கவே கடுமையாக தாக்கி வாயில் பல் துலக்கும் பிரசால் குத்தியுள்ளனர். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அப்பகுதியில் நடந்து சென்றவர்கள் முதியவர் இறந்து கிடப்பதை பார்த்து நகர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து முதியவர் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்யப்பட்டவர் யார்? எந்த ஊர்? என்ற விபரம் தெரியவில்லை. இது தொடர்பாக 3 பேரை போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.


 

 

Tags :

Share via