வேலூர் அருகே உணவில் வி‌ஷம் கலந்து கணவனை கொன்ற மனைவி

by Admin / 03-08-2021 12:56:39pm
வேலூர் அருகே உணவில் வி‌ஷம் கலந்து கணவனை கொன்ற மனைவி

 



நடத்தையில் சந்தேகப்பட்ட கணவரை உணவில் வி‌ஷம் கலந்து மனைவி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள அகரம் புதுமனை கிராமத்தைச் சேர்ந்தவர் சூரிமுத்து (வயது 70). இவரது முதல் மனைவி இறந்து விட்டார். இதனால் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு நிர்மலா (45) என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.
 
அவர்களுக்கு 4 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் சூரி முத்துவிற்கு அவரது மனைவி நிர்மலா மீது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதுதொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று காலை அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. சூரிமுத்து மனைவியுடன் சண்டை போட்டு விட்டு விவசாய நிலத்திற்கு சென்றுவிட்டார். அங்கு சூரிமுத்து அவருடைய உறவினர் காந்தராஜ் மற்றும் ஒருவர் என 3 பேர் வேலை செய்து கொண்டிருந்தனர். அடிக்கடி தகராறு செய்ததால் கணவரை கொலை செய்ய நிர்மலா திட்டமிட்டார்.

இதற்காக கணவருக்கு உணவு சமைத்து அதில் வி‌ஷம் கலந்தார். பின்னர் வி‌ஷம் கலந்த உணவை எடுத்துக்கொண்டு விவசாய நிலத்திற்கு சென்றார்.

இந்த உணவை சூரி முத்து அவருடைய உறவினர் காந்தராஜ் எடுத்து சாப்பிட்டனர். அப்போது அங்கு வந்த ஒருவர் உணவில் வி‌ஷ வாடை வருவதாக கூறினார். இதையடுத்து இருவரும் அந்த உணவை மீண்டும் முகர்ந்து பார்த்த போது உணவில் வி‌ஷம் கலந்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அதற்குள் அவர்களது. உடல்நிலை மிகவும் மோசமானது. இதை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டனர்.

அங்கு சூரிமூத்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அவரது உறவினர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தகவல் அறிந்த வேப்பங்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அதில் நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர் தொடர்ந்து தகராறு செய்ததால் அவரை கொலை செய்ய முடிவு செய்து உணவில் வி‌ஷம் கலந்து நிர்மலா கொடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து நிர்மலாவை கைது செய்தனர்.

 

Tags :

Share via