தமிழ்நாட்டில் 165 நாட்களுக்குப் பின்  மருத்துவ கல்லூரிகள் தொடக்கம்

by Editor / 16-08-2021 04:25:19pm
தமிழ்நாட்டில் 165 நாட்களுக்குப் பின்  மருத்துவ கல்லூரிகள் தொடக்கம்

 


தமிழ்நாட்டில் 60 மருத்துவ கல்லூரிகள் திறக்கப்பட்டு, மருத்துவ மாணவர்களுக்கு, இன்று முதல் நேரடி வகுப்புகள் தொடங்கியது.
தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இருப்பினும் மாணவர்களின் கற்றல்திறன் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆசிரியர்களும், பேராசிரியர்களும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தி வருகின்றனர்.


இந்நிலையில் 165 நாட்களுக்கு பிறகு தமிழ்நாட்டில் மருத்துவ கல்லூரிகள்  திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ளன. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்த்து மொத்தம் 60 கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எம்பிபிஎஸ், பிடிஎஸ், நர்சிங் மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ளது.


 2 ஆம் ஆண்டு தொடங்கி நான்காம் ஆண்டு வரையிலான மருத்துவ மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. கல்லூரிக்கு வரும் மாணவர்கள் 48 மணி நேரத்திற்கு முன்பாக கொரோனா இல்லை என்ற சான்றிதழை கொண்டு வரவேண்டும் அல்லது இரண்டு தவணைத் தடுப்பூசி கொண்டதற்கான சான்றிதழை எடுத்து வர வேண்டும் என்று மருத்துவ கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.


கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையாக வகுப்பறையில் மாணவர்கள் தனிமனித இடைவெளியை கடைபிடித்து வகுப்புகளை கவனிக்க வேண்டும். குழுவாக அமர்ந்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். விடுதிகளில் பெற்றோர்கள் மற்றும் பார்வையாளர்கள் வருகைக்கு தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக வகுப்பறைக்கு 30 மாணவர்கள் மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via