ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய கடைசி ராணுவ வீரர்... புகைப்படம் வைரல்!

by Admin / 31-08-2021 04:13:32pm
ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய கடைசி ராணுவ வீரர்... புகைப்படம் வைரல்!



ஆப்கானிலிருந்து நேற்றிரவு 11.59 மணிக்கு அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய நிலையில், ஆப்கானிஸ் தானில் இருந்து வெளியேறிய கடைசி ராணுவ வீரர் என்ற புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது.
 
கடந்த 2001ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற இரட்டை கோபுர தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானில் தரையிறங்கியது. சுமார் 20 ஆண்டுகள் நடைபெற்ற இந்த போரில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றினர். இதனால் அமெரிக்க ராணுவம் உடனடியாக வெளியேற வேண்டும் என தலிபான்கள் கூறிய நிலையில் காபூல் விமான நிலையம் அருகில் இரட்டை குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது.

 இதில் அமெரிக்க வீரர்கள் சிலர் கொல்லப்பட்டனர். தலிபான்களின் தாக்குதலுக்கு அமெரிக்கா தக்க பதிலடி கொடுக்கும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருந்தார். அதேசமயம் ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறும் என்றும் அவர் கூறினார். இதனிடையே ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதால் அங்கு சிக்கிக்கொண்ட வெளிநாட்டவர்களை மீட்கும் பணியில் அமெரிக்க ராணுவம் ஈடுபட்டது.

இந்நிலையில் ஜோ பைடன் அறிவித்த கால கெடு இன்றுடன் நிறைவடையும் நிலையில் நேற்றிரவு 11.59 மணிக்கு அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியது. காபூலிருந்து புறப்பட்ட கடைசி விமானத்தில் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க தூதர் மற்றும் ராணுவ வீரர்கள் பயணித்தனர். அத்துடன் ஆப்கானிஸ் தானில் இருந்து வெளியேறிய கடைசி ராணுவ வீரர் என்ற புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது. இதன் மூலம் அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் நடத்திய 20 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதை தலிபான்கள் துப்பாக்கியால் சுட்டு கொண்டாடினர்.
 

 

Tags :

Share via