தமிழக வீரர் மாரியப்பனுக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு: அமைச்சர் மா.சுப்பரமணியன் வாழ்த்து

by Editor / 04-09-2021 04:55:05pm
தமிழக வீரர் மாரியப்பனுக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு: அமைச்சர் மா.சுப்பரமணியன் வாழ்த்து

பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று நாடு திரும்பிய தமிழகவீரர் மாரியப்பனுக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

டோக்கியோ பாரலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். இந்நிலையில் நேற்று நாடு திரும்பிய அவருக்கு புதுடெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் தமிழக அரசின் டெல்லி சிறப்பி பிரதிநிதி ஏகேஎஸ் விஜயன் ஆகியோர் பூங்கொத்து அளித்தும், பொன்னாடை போர்த்தியும் மாரியப்பனை வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து மாரியப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

டோக்கியோ பாராலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்ல முடியாதது வருத்தம் அளிப்பதாகத் தெரிவித்தார். எனினும் அடுத்த ஒலிம்பிக்கில் நிச்சயம் தங்கம் வெல்வேன்.

டோக்கியோ பாராலிம்பிக்கில் தங்கம் வெல்லும் இலக்குடன் சென்றேன். ஆனால் மழையால் வெள்ளி பதக்கம் மட்டுமே பெற முடிந்தது. அடுத்த பாராலிம்பிக்கில் நிச்சயம் தங்கம் வெல்வேன். எனக்கு ரூ.2 கோடி வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மற்ற வீரர்களுக்கு அரசுப் பணி வழங்கியது போல் எனக்கும் வழங்க வேண்டும். குரூப்-1' பிரிவில் அரசுப் பணி வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைக்க உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags :

Share via