கொரோனா ஆபத்து இருப்பதால் பள்ளிகளை மூட வேண்டும்"

by Editor / 09-09-2021 09:47:43am
கொரோனா ஆபத்து இருப்பதால் பள்ளிகளை மூட வேண்டும்

பள்ளி மாணவர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டு வரும் நிலையில், அவர்களின் தொடர்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்து ள்ளது.

நெல்லையைச் சேர்ந்த அப்துல் வஹாப் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்துள்ளார். அதில், கொரோனா நோய்த்தொற்றின் மூன்றாம் நிலை எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம்.

இந்த சூழலில், செப்டம்பர் 1ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் பள்ளிகளையும், கல்லூரிகளையும் திறக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்து அரசு ஆணை பிறப்பித்தது.

பள்ளி செல்லும் மாணவர்கள் முழு நேரமும் முக கவசம் அணிந்திருப்பதும், அதனை முறையாகப் பின்பற்றுவதும் சாத்தியமில்லாதது. கொரோனா தடுப்பூசியை 18 வயதிற்குக் கீழ் உள்ளவர்களுக்குச் செலுத்துவது தொடர்பாக இதுவரை தெளிவான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை.

அதேபோல் இரு தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்படாமல் மாணவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்வது கொரோனா நோய்த்தொற்று பரவலை அதிகரிக்கச் செய்ய அதிக வாய்ப்புள்ளது.

சுழற்சி முறையில் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஒரே வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு இடையேயான கற்றலில் வேறுபாடுகள் எழ வாய்ப்புள்ளது.

ஆகவே கொரோனா நோய்த்தொற்றின் மூன்றாம் அலை நெருங்கியுள்ளதைக் கருத்தில் கொண்டு, நேரடியாக அல்லாமல், ஆன்லைன் வழியாகவும் மாணவர்கள் வகுப்புகளைக் கவனிக்க அனுமதிக்கும் வகையில் வழிகாட்டல்களை வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், மாணவர்கள் பள்ளிக்கு நேரடியாக வருமாறு கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

மனுதாரர் தரப்பில் தினசரி கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் நேரடி வகுப்புகளுக்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், "மனுதாரரின் மனுவில் அதற்கான கோரிக்கை எதுவும் இல்லை புதிதாக மனுவைத் தாக்கல் செய்யலாம் எனத் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து அரசு தரப்பில் 6 முதல் 7 மாணவர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. ஆனால் எந்த தொடர்பு மூலம் அவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டது என்பது குறித்துக் கண்டறியப்படவில்லை.

தற்போது தினசரி நோய்த் தொற்றும் குறைந்து வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நீதிபதிகள் வழக்கை 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

 

Tags :

Share via