சென்னையில்  சாலையில் கார் மோதி 2 பெண்கள் பலி

by Editor / 28-09-2021 03:27:10pm
 சென்னையில்  சாலையில் கார் மோதி 2 பெண்கள் பலி



வில்லிவாக்கத்தில் குடிபோதையில் கல்லூரி மாணவர் ஓட்டி வந்த சொகுசு கார் பயங்கரமாக மோதியதில் சாலை யில் மஞ்சள் வெள்ளை வர்ணம் பூசிக் கொண்டிருந்த 2 பெண்கள் அதே இடத்தில் பலியானார்கள். இந்த விபத்தில் மேலும் 7 பேர் காயமடைந்தனர். 


வில்லிவாக்கம் பாடி தாதங்குப்பம் ரெயில்வே மேம்பாலம் நெடுஞ்சாலையின் நடுவில் உள்ள சாலைத்தடுப்பு மேடை நெடுகிலும் 9 ஆண் பெண் தொழிலாளர்கள் மஞ்சள் வெள்ளை வர்ணம் பூசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பாதுகாப்புக்காக சாலையின் குறுக்கே அவர்கள் வேலைக்கு வந்த டாடா ஏசி வேனை நிறுத்தி வைத்து விட்டு வேலைபார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அந்த சாலை வழியாக வேகமாக வந்த ஒரு சொகுசு கார் டாடா ஏசி வேன் மீது மோதி அதைத் தள்ளிக்கொண்டே வந்து சாலையில் வர்ணம் பூசிக் கொண்டிருந்தவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் அங்கு வேலைபார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.


இதில் திருவண்ணாமலை காட்டு மலையனூரைச் சேர்ந்த சசிகலா வயது 27 , வீராபுரம் கன்னியம்மன் நகரைச் சேர்ந்த காமாட்சி வயது 27 ஆகிய 2 தொழிலாளர்ளும் அதே இடத்தில் பலியானார்கள். இந்த விபத்தில் மேலும் 7 பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்தை ஏற்படுத்திய சொகுசு காரை சுஜித் வயது 19 என்பவர் ஓட்டி வந்தார். அவர் பெரம்பூர் சிவகாமி நகரைச் சேர்ந்தவர். தண்டலம் ராஜேசுவரி என்ஜினீரிங் கல்லூரியில் 3 ம் ஆண்டு பொறியியல் பட்டப்படிப்பு படித்து வருகிறார். அவருடன் அவரது நண்பர்கள் காரில் இருந்தனர். அவர்கள் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. சுஜித் நண்பர்களுடன் அந்த காரில் கிழக்கு கடற்கரை சாலை நோக்கிப்போய்க் கொண்டிருந்ததாக தெரிகிறது. திருமங்கலம் போலீசார் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

 

Tags :

Share via