கருணை கொலை செய்ய உத்தரவிட மூதாட்டி ஆட்சியரிடம் மனு

by Editor / 05-10-2021 09:36:21am
 கருணை கொலை செய்ய உத்தரவிட  மூதாட்டி ஆட்சியரிடம் மனு

பிள்ளைகள் தன்னை விரட்டியடித்ததால் கருணை கொலை செய்ய உத்தரவிட வேண்டும் என மூதாட்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கிய சோகம் நடந்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள வாணாதிராஜபுரம் பகுதியை சார்ந்தவர் தாவூத் பீவி (வயது 90). இவர் கணவரை இழந்து, தனது இளையமகன் அஷ்ரப் அலியுடன் வசித்து வருகிறார். அஷ்ரப் அலி தற்போது வெளிநாடு சென்றுவிட்டார்.

இந்நிலையில், கணவர் வெளிநாட்டிற்கு சென்றதும், கணவரின் தாயான பீவியை அவரது மருமகள் கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார். அவரது மூத்த மகனும் தனது தாயாரை வீட்டினை விட்டு வெளியேற்றியுள்ளார்.

இதனால் பெரும் மனஉளைச்சலுக்கு உள்ளாகிய தாவூத் பீவி, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு வழங்கியுள்ளார். மனுவில், எனது பிள்ளைகள் என்னை கைவிட்டுவிட்டனர். அக்கம் பக்கத்தினர் கொடுத்த உணவை சாப்பிட்டு வருகிறேன். எனக்கு மிகுந்த மனவேதனையாக உள்ளது.

எனது வீட்டை பிள்ளைகளிடம் இருந்து மீட்டு விற்பனை செய்து வரும் பணத்தை வங்கியில் வரவு வைத்து தர வேண்டும். அதனை வைத்து இறுதி காலத்தை கழித்துக்கொள்கிறேன். இல்லாத பட்சத்தில் என்னை கருணை கொலை செய்துவிடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

இதனையறிந்த மாவட்ட ஆட்சியர் லலிதா, மயிலாடுதுறை ஆர்.டி.ஓ பாலாஜி மூலமாக நடவடிக்கை எடுக்க, அவரை பீவியின் மூத்தமகன் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். அவரது குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via