சரியாக பணி செய்யாத மின்வாரிய  பொறியாளர்கள் 2 பேர் சஸ்பெண்ட்

by Editor / 12-10-2021 04:32:28pm
சரியாக பணி செய்யாத மின்வாரிய  பொறியாளர்கள் 2 பேர் சஸ்பெண்ட்



சரிவர பணி மேற்கொள்ளாத மின்வாரிய பொறியாளர்கள் 2 பேர் தற்காலிக பணி இடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இது குறித்து தமிழ்நாடு மின் பகிர்மான வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தில் பெறப்பட்ட புகார்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தலைமையில் நடைப்பெற்றது.


இக்கூட்டத்தில் தலைமைப் பொறியாளர்கள் சென்னை வடக்கு, சென்னை தெற்கு, மத்திய, மேற்கு, மின் பகிர்மான வட்டங்கள் தொடர்புடைய மேற்பார்வை பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் உதவிப் பொறியாளர்கள் ஆகியோர்களிடம் இதுவரை மின்னகத்தில் பெறப்பட்ட புகார்கள் குறித்தும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.


இந்த ஆய்வின்படி சரிவர பணி மேற்கொள்ளாத சென்னை வடக்கு, புதுவண்ணாரப்பேட்டை மின்பகிர்மான வட்டத்தை சேர்ந்த இளநிலை பொறியாளர் எம்.சண்முகம் மற்றும் சென்னை தெற்கு மின்பகிர்மான வட்டத்தை சேர்ந்த துரைப்பாக்கம் உதவி மின் பொறியாளர் (அப்போதைய உதவி மின் பொறியாளர்/ பள்ளிக்கரணை) வி. மகேஷ்வரி ஆகிய இருவரும் தற்காலிக பணி இடை நீக்கம் செய்யப்பட்டனர்.

 

Tags :

Share via