இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 23 பேர் கைது

by Editor / 14-10-2021 07:19:42pm
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 23 பேர் கைது

நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து கடந்த 11 -ம் தேதி அதிகாலை 2.00 மணிக்கு அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த சிவனேசன் மற்றும் சிவகுமார் என்பவர்களுக்குச் சொந்தமான விசைப்படகுகளில் அக்கரைப்பேட்டை, சமந்தன்பேட்டை, சந்திரபாடி, புதுப்பேட்டை, பெருமாள்பேட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 23 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

இந்நிலையில் நேற்றிரவு (13.10.2021) 8 மணியளவில் கோடியக்கரை தென்கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கு வந்த இலங்கை கடற்படை நாகை மீனவர்களின் விசைப்படகை சுற்றி வளைத்து எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இரண்டு விசைப்படகுகளையும் படகிலிருந்த 23 மீனவர்களையும் கைது செய்தனர். இலங்கை பருத்தித்துறை கடல் பகுதியில் வைத்து கைது செய்ததாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட மீனவர்களையும் படகுகளையும் விசாரணைக்காக காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா பரிசோதனைக்கு பின் மீனவர்கள் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

 

Tags :

Share via