நகராட்சி தேர்தல் நடத்த முதல்வர் உத்தரவு -அமைச்சர் கே.என்.நேரு

by Editor / 17-10-2021 04:05:04pm
நகராட்சி தேர்தல் நடத்த முதல்வர் உத்தரவு -அமைச்சர் கே.என்.நேரு

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள குடிநீர்த் தொட்டி வளாகத்தில், 450 லட்சம் மதிப்பில்,5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை குடிநீர்த் தொட்டி கட்டும் பணிகளை இன்று காலை தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு தொடங்கி வைத்தார், அதே போல் பிரதான உந்துகுழாய்கள் பதிக்கும் பணிகளையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.

இதில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கே.என் நேரு: திருச்சி பிராட்டியூர் கருமண்டபம் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு இன்றி கிடைப்பதற்காக ஏற்பாடுகளை செய்து வருகிறோம். இன்று புதிய நீர் தேக்க தொட்டிக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

அடுத்தபடியாக நகராட்சி பகுதிகளில் தேர்தல் நடத்துவதற்கு தமிழக முதல்வர் உத்தரவு கொடுத்துள்ளார். அதற்கான பணிகள் விரைவில் துவங்கும், ஆரம்பக்க்கட்ட பணிகளை துவங்கி விட்டோம். அண்ணா தி.மு.க. ஆட்சியில் இருந்த போது எப்படி உள்ளாட்சி தேர்தலை நடத்தினார்களோ விதிமுறைகளை பின்பற்றி அதே போல் தான் நாங்கள் நடத்தினோம். ஆனால் அவர்கள் தேர்தல் நடத்திய போது நாங்கள் எல்லாம் சிறையில் இருந்தோம். திருப்பத்தூர் 4 வாக்கு வித்யாசத்தில் திமுக தோல்வி அடைந்துள்ளது, மிக மிக நேர்மையான முறையில் திமுக அரசு இந்த தேர்தலை நடத்தி உள்ளது. ஏற்கனவே ஒதுக்கியபடி விதிமுறைகளை பின்பற்றி தான் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் தோல்விக்கான காரணத்தை அதிமுக தேடி கண்டுபிடித்து சொல்கிறது. 28 இடத்தில் அதிமுக எப்படி வெற்றி பெற்றார்கள்? அதற்கு அதிமுக பதில் சொல்ல வேண்டும்.

பக்தர்களின் நலன்கருதி வாரத்தின் இறுதி நாட்களில் கோவில்களில் திறக்க வேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்ததை தெரிந்துகொண்டு பாஜக போராட்டம் நடத்தினார்கள். திறந்த பின்னர் நாங்கள் சொல்லித்தான் திறந்தோம் என்று கூறுகிறார்கள்.

திருச்சியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு நிர்வாக ரீதியாக ஒப்புதல் அளித்து உள்ளார்கள். முதற்கட்டமாக 140 கோடி ரூபாய் நேற்று பெறப்பட்டுள்ளது, இந்த பணிகளை துவக்கி வைப்பதற்கு தமிழக முதல்வரை வரவேற்று உள்ளோம், அவர் விரைவில் வந்து இதனை துவக்கி வைப்பார் என்று எதிர்பார்க்கிறோம் இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags :

Share via