ஓ.பி.எஸ் சசிகலாவுடன் இணைந்து அதிமுகவை வழிநடத்துவார்.. புகழேந்தி

by Editor / 17-10-2021 09:04:46pm
ஓ.பி.எஸ் சசிகலாவுடன் இணைந்து அதிமுகவை வழிநடத்துவார்.. புகழேந்தி

அ.தி.மு.க பொன்விழா ஆண்டு கொண்டாடப்படுவதையொட்டி, அ.தி.மு.க முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இதனை தொடர்ந்து நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- தி.மு.க மக்களுக்கு நல்லாட்சி அளித்து வருகிறது. உள்ளாட்சி தேர்தலில் 90% வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ள தி.மு.க.வுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

எனக்கு தெரிந்து இப்படி ஒரு தோல்வியை அ.தி.மு.க கண்டதில்லை. 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்ற அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு கட்சி தலைமை ஒரு வாழ்த்து கூட சொல்லாதது வேதனை அளிப்பதாக உள்ளது. அ.தி.மு.க திசைமாறி சென்று கொண்டிருக்கிறது. அ.தி.மு.க யாருடைய சொத்தும் அல்ல. இது ஏழைகளின் சொத்து. அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே கட்சியை வழிநடத்த முடியும்.

சசிகலாவை அனுமதிக்க மாட்டோம் என்று கூறுவதற்கு ஜெயக்குமாருக்கு என்ன உரிமை உள்ளது. அப்போ வாரிசு அரசியல் மட்டும் செய்யலாமா? அ.தி.மு.க எந்த நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதோ, அதை கடந்து வேறு பாதையில் சென்று கொண்டிருக்கிறது. என்று குறிப்பிட்டார். அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருக்கிறார்.

நேரம் கிடைத்தால் அவரை நீக்கிவிட்டு, சசிகலாவுடன் இணைந்து கட்சியை வழிநடத்துவார். எனவே எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வளர்த்த கட்சியை காப்பாற்ற வேண்டும் என்றால் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டால்தான் முடியும். கட்சிக்குள் பிளவுகள் இருந்தால் அக்கட்சி நிச்சயம் வெற்றி பெறாது. எடப்பாடி பழனிச்சாமி அனைவரையும் சேர்ந்து வாழ வேண்டும்.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஜாதி அரசியல் தற்போது உருவாகி உள்ளது. எடப்பாடி தன் தொகுதியிலேயே தோற்றுவிட்டார். ஓ.பி.எஸ்., என்கிற ஒற்றை தலைமையில் கட்சி நடத்தப்பட்டால் என்னை உட்பட அனைத்து தொடண்டர்களும் ஏற்று கொள்வார்கள். இவ்வாறு புகழேந்தி தெரிவித்தார்.

 

Tags :

Share via