நெல்லை, உள்ளிட்ட 3 இடங்களில் ரூ.15 கோடியில் 7 கருவூலக் கட்டிடங்கள்: மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

by Editor / 25-10-2021 04:49:13pm
நெல்லை, உள்ளிட்ட 3 இடங்களில் ரூ.15 கோடியில் 7 கருவூலக் கட்டிடங்கள்:  மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், நிதித்துறையின் கீழ் செயல்படும் கருவூலக் கணக்குத்துறை சார்பில் 15 கோடியே 10 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் திருநெல்வேலி, காஞ்சிபுரம் மற்றும் திண்டுக்கல்லில் கட்டப்பட்டுள்ள 3 மாவட்ட கருவூல அலுவலகக் கட்டிடங்களையும், மணச்சநல்லூர், பூவிருந்தவல்லி, மயிலாடுதுறை மற்றும் திண்டிவனம் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள 4 சார் கருவூல அலுவலகக் கட்டடங்களையும் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.


மேம்பட்ட நிர்வாக வசதிக்காகவும், அரசுக்கு ஏற்படும் தொடர் வாடகை செலவினத்தைத் குறைக்கவும், மின் ஆளுமை திட்டங்களை துரிதமாக செயல்படுத்தவும், விலை மதிப்புமிக்க முத்திரைத்தாள்கள் மற்றும் சேம பாதுகாப்பு பொருட்களை பாதுகாக்கவும், ஓய்வூதியர்களுக்கான வசதிகள் செய்து கொடுக்கவும், பணம் பெற்று வழங்கும் அலுவலர்களின் பட்டியல்களை துரிதமாக ஏற்பளிக்கவும், போதிய இடவசதியின்றி வாடகை கட்டடங்களில் இயங்கி வரும் மாவட்ட கருவூல அலுவலகங்கள், சார் கருவூல அலுவலங்களுக்கு தமிழ்நாடு அரசால் சொந்தக் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
இதன்மூலம் பொது மக்களுக்கும், பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் விரைவாக சேவை வழங்க வழிவகை ஏற்படும்.


அந்த வகையில், திருநெல்வேலியில் 21,400 சதுர அடி பரப்பளவில் 3 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், காஞ்சிபுரத்தில் 21,658 சதுர அடி பரப்பளவில் 4 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், திண்டுக்கல்லில் 10,671 சதுர அடி பரப்பளவில் 2 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 3 மாவட்ட கருவூல அலுவலகக் கட்டடங்கள்;


திருச்சி மாவட்டம் மணச்சநல்லூரில் 2,679 சதுர அடி பரப்பளவில் 1 கோடியே 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், திருவள்ளூர் மாவட்டம் - பூவிருந்தவல்லியில் 3,591 சதுர அடி பரப்பளவில் 85 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், மயிலாடுதுறையில் 3,068 சதுர அடி பரப்பளவில் 99 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், விழுப்புரம் மாவட்டம் - திண்டிவனத்தில் 3,270 சதுர அடி பரப்பளவில் 99 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 4 சார் கருவூல அலுவலகக் கட்டடங்கள்;


என மொத்தம் 15 கோடியே 10 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 மாவட்ட கருவூல அலுவலகக் கட்டடங்கள் மற்றும் 4 சார் கருவூல அலுவலகக் கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

 

Tags :

Share via