காரும், மோட்டார் சைக்கிளும் மோதியது - வாலிபர் பலி

by Editor / 08-11-2021 09:51:13pm
காரும், மோட்டார் சைக்கிளும் மோதியது -  வாலிபர் பலி

 

நிலக்கோட்டை அருகே காரும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வாலிபர் மின்கம்பியில் தொங்கியபடி பலியானார். படுகாயம் அடைந்த நண்பரும் உயிரிழந்தார்.

விபத்தில் தூக்கி வீசப்பட்டு, மின்கம்பி மீது விழுந்து தொங்கியபடி பலியான அஜித் கண்ணன்.
திண்டுக்கல் :

மதுரை மாவட்டம் பெருங்குடி பகுதியை சேர்ந்தவர் காமு என்ற காமராஜ் (வயது 21). மதுரையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் அஜித் கண்ணன் (21).
 
நண்பர்களான இவர்கள் 2 பேரும், தங்களது நண்பர்கள் 18 பேருடன் சேர்ந்து 10 மோட்டார் சைக்கிள்களில் கடந்த 5-ந் தேதி கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றனர். நேற்று காலையில் அவர்கள் மீண்டும் மோட்டார் சைக்கிள்களில் மதுரை நோக்கி புறப்பட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே காமு, அஜித்கண்ணன் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். மோட்டார் சைக்கிளை காமு ஓட்டினார்.

சிலுக்குவார்பட்டி சிவன்கோவில் பகுதியில் வந்தபோது அங்குள்ள சாலை வளைவில் எதிரே வந்த காரும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் அப்பளம் போல நொறுங்கியது. காரின் முன்பகுதியும் பலத்த சேதம் அடைந்தது.

கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கோர விபத்தில் சினிமாவை மிஞ்சும் காட்சியை போல் மோட்டார் சைக்கிளில் இருந்து 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் அஜித்கண்ணன் சாலையின் குறுக்கே சென்ற மின்கம்பி மீது பறந்து போய் விழுந்தார்.

மின்கம்பியில் தொங்கியபடி கிடந்த அஜித்கண்ணன் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதேபோல் விபத்தில் சிக்கி, சாலையோரத்தில் போய் விழுந்த காமு படுகாயம் அடைந்து பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்தில், அவர்களை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களில் வந்த சக நண்பர்கள் விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இறந்து கிடந்த அவர்களை பார்த்து கதறி அழுத சம்பவம் காண்போரின் கண்களை குளமாக்கியது.

 

Tags :

Share via