நாகாலாந்து துப்பாக்கிச்சூடு:மத்திய அரசு சார்பாக நாடாளுமன்றத்தில் வருத்தம் தெரிவித்த அமித் ஷா

by Editor / 06-12-2021 07:09:24pm
நாகாலாந்து துப்பாக்கிச்சூடு:மத்திய அரசு சார்பாக நாடாளுமன்றத்தில் வருத்தம் தெரிவித்த அமித் ஷா

நாகாலாந்தில் தீவிரவாதிகள் என்று நினைத்து பொதுமக்கள் 6 பேரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரும் அதிர்வுஅலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மக்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘நாகலாந்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானது. இதற்காக மத்திய அரசு சார்பில் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை கூறிக்கொள்கிறேன்.

துப்பாக்கிச் சூட்டுக்கு பின்னர் நேற்று மாலை 250 பேர் கொண்ட கும்பல் துணை இராணுவமான அசாம் ரைபிள்ஸ்-க்கு சொந்தமான கட்டிடங்கள் மற்றும் வாகனங்களுக்கு தீ வைத்தது. அவர்களை விரட்டுவதற்காக அசாம் ரைபிள்ஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்தார்.


இந்த சம்பவங்கள் தொடர்பாக நாகலாந்து தலைமை செயலர், உயரதிகாரிகள், துணை ராணுவ அதிகாரிகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. பதற்றம் அதிகமுள்ள பகுதிக்கு, கூடுதல் துணை ராணுவம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இனி இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்கவே கூடாது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

நாகலாந்தில் அமைதியை நிலை நிறுத்துவதற்கான அனைத்து பணிகளையும், மத்திய அரசு மேற்கொள்ளும். பாதுகாப்பு படை தரப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சில வீரர்கள் காயமடைந்துள்ளனர். கூட்டத்தை விரட்டியடிக்க, தற்காப்புக்காக பாதுகாப்பு படையினர் சுட்டனர். இதனால் பொதுமக்கள் 7 பேர் உயிரிழந்தார்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டது.

மோன் மாவட்டத்தில் நேற்று முன்தினம் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போது, வாகனத்தில் இருந்த 8 பேரில் 6 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த இருவர் அருகில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த தகவல் அறிந்ததும் கிராமத்தினர் ராணுவ முகாமை சுற்றிவளைத்தனர். அப்போது 2 வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. சம்பவம் நடந்த மோன் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாடுவதாக ராணுவத்திற்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில்தான் சந்தேகத்திற்கிடமான வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது’ என்று தெரிவித்தார்.
 

நாகாலாந்து துப்பாக்கிச்சூடு:மத்திய அரசு சார்பாக நாடாளுமன்றத்தில் வருத்தம் தெரிவித்த அமித் ஷா
 

Tags :

Share via