அதிமுக பொதுக்குழுவுக்கு தயாராகும் ஈபிஎஸ்

by Editor / 10-07-2022 01:20:24pm
அதிமுக பொதுக்குழுவுக்கு தயாராகும் ஈபிஎஸ்

அதிமுக பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில், அதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஜுன் 23ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு முன்னதாகவே ஒற்றைத்தலைமை சர்ச்சை பூதாகரமானது. அதன் பிறகு நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், ஏற்கனவே ஒப்புதல் அளித்த 23 தீர்மானங்களை தவிர்த்து புதிய தீர்மானங்கள் இயற்றக் கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 23-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்ட தீர்மானங்களை பொதுக்குழு உறுப்பினர்கள் ரத்து செய்வதாக அறிவித்து, மற்றொரு நாளில் பொதுக்குழுவை கூட்டுமாறு முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேனிடம் கோரிக்கை வைத்தார். அதன்படி, ஜூலை 11-ம் தேதி பொதுக்குழு நடைபெறும் என தமிழ் மகன் உசேன் அறிவிக்க, இந்த பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கின் தீர்ப்பு நாளை காலை 9 மணிக்கு வரவுள்ளது. இருப்பினும் ஈபிஎஸ் தரப்பு நாளை பொதுக்குழுவை கூட்டி, அதிமுகவின் பொதுச்செயலாளர் ஈபிஎஸ் தான் என்ற முடிவையும், தீர்மானத்தையும் இயற்றியே ஆகவேண்டும் என முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். வானகரத்தில் பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக வைக்கப்பட்டுள்ள பேனர்கள் மற்றும் போஸ்டர்களில் ஓபிஎஸ்ஸின் புகைப்படங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் தனது ஆதரவாளர்களுடன் ஈபிஎஸ் பசுமை வழிச்சாலையில் உள்ள வீட்டில் ஆலோசனை நடத்தி வருகிறார். 

 

Tags :

Share via