லாரி டயரில் சிக்கி தலை நசுங்கி பலி

by Staff / 14-10-2022 04:37:59pm
 லாரி டயரில் சிக்கி தலை நசுங்கி பலி


ஈரோடு சென்னிமலை ரோடு பெருமாள் காடு பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 38). பெயிண்டர். இவருடைய மனைவி புவனேஸ்வரி. இவர்களுக்கு மோகன தர்ஷினி (7) என்ற மகள் உள்ளார்.
இந்த நிலையில் சதீஷ்குமார் சொந்த வேலை காரணமாக ஈரோடு-காவிரி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி இவருடைய மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் நிலை தடுமாறி சதீஷ்குமார் கீழே விழுந்தார். அப்போது லாரியின் பின் சக்கரம் அவரது தலையில் ஏறி இறங்கியபடி அங்கிருந்து சென்றுவிட்டது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து சதீஷ்குமார் பரிதாபமாக இறந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி ஈரோடு கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று சதீஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சதீஷ்குமாரின் உடலை பார்த்து அவருடைய உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து, சதீஷ்குமார் மீது மோதிய லாரி குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.மேலும் விபத்து நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

 

Tags :

Share via