ஏ. டி. எம். கொள்ளையர்கள்விரட்டி பிடித்த போலீசாருக்கு, ஐ. ஜி. சுதாகர் பாராட்டு

by Staff / 24-02-2023 11:55:19am
ஏ. டி. எம். கொள்ளையர்கள்விரட்டி பிடித்த போலீசாருக்கு, ஐ. ஜி. சுதாகர் பாராட்டு

சேலம் மாவட்டம், ஓமலூர் அடுத்த காடையாம்பட்டி சந்தைபேட்டை பகுதியில் இந்தியா பேங்க் ஏ. டி. எம். உள்ளது. இந்த ஏ. டி. எம். கிராமப்புற பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. இதில் ஏராளமான கிராம மக்கள் அவசர தேவைக்காக பணம் எடுத்து பயன்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி நள்ளிரவு 2 மணி அளவில் மர்ம நபர்கள் 3 பேர் ஏ. டி. எம். மையத்துக்குள் புகுந்தனர். அவர்கள் ஏ. டி. எம். எந்திரத்தை உடைத்து அதில் இருந்த பணத்தை திருட முயன்று உள்ளனர்.
அப்போது தீவட்டிப்பட்டி பெண் போலீசார் தெய்வ ராணி, நர்மதா ஆகியோர் ரோந்து வந்துள்ளனர். இதைப்பார்த்த கொள்ளையர்கள் 3 பேரில் 2 பேர் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர். மற்றொருவர் ஊருக்குள் ஓடி தப்பிச்சென்றார். இதனிடையே சந்தேகம் அடைந்த ரோந்துப்பணியில் ஈடுபட்ட பெண் போலீசார், ஏ. டி. எம். மில் சென்று பார்த்த போது அங்கு கடப்பாரை, ஒரு ஜோடி செருப்பு ஆகியவற்றை கொள்ளையர்கள் விட்டு ெசன்றுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தீவட்டிப்பட்டி பயிற்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே அவர் சமயோசிதமாக செயல்பட்டு, தீவட்டிப்பட்டி ஆட்டோ ஸ்டாண்டில் உள்ள ஆட்டோ டிரைவர்களுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு, அந்த பகுதியில் செருப்பு இல்லாமல் யாராவது வந்தால் தகவல் கொடுக்குமாறு கூறினார். உடனடியாக தீவட்டிப்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டுக்கு போலீஸ்காரர் சந்திரன் உடன் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் சென்றார்.

அப்போது அந்த பகுதியில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்த டிரைவர் சந்தோஷ், செருப்பு இல்லாமல் அந்த வழியாக ஒருவர் சென்றது குறித்து பயிற்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் கூறினார். உடனே ஆட்டோ டிரைவர் கூறிய இடத்திற்கு சாதாரண உடையில் சென்ற பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரை பார்த்து செருப்பு போடாமல் நின்ற வாலிபர் ஒருவர் ஓட்டம் பிடித்தார். அவரை துரத்திச்சென்ற சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தீவட்டிப்பட்டி ஏரி பகுதியில் போலீசார் உதவியுடன் அந்த வாலிபரை மடக்கி பிடித்தார். இதில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் கீழே விழுந்ததில் கையில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து பிடிபட்ட வாலிபரிடம் விசாரணை நடத்தியதில், சேலம் குகை பகுதியை சேர்ந்த ஆனந்த் (வயது 22) என்பது தெரியவந்தது. ஏ. டி. எம். கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்த நிலையில் அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது மற்றொரு கூட்டாளி ஏற்காடு கொளகூர் பகுதியை சேர்ந்த லட்சுமணன் (28) என தெரியவந்தது.இதையடுத்து அவரையும் போலீசார் அதே பகுதியில் மடக்கி பிடித்தனர். அதே நேரத்தில் தலைமறைவான மற்றொருவரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.இந்த நிலையில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்த பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், போலீஸ்காரர் சந்திரன், பெண் போலீசார் தெய்வராணி, நர்மதா, செருப்பு அணியாமல் சென்றவர் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்த ஆட்டோ டிரைவர் சந்தோஷ் ஆகியோரை மேற்கு மண்டல போலீஸ் ஐ. ஜி. சுதாகர் நேரில் அழைத்து பாராட்டிசான்றிதழ் வழங்கிகவுரவித்தார்.

 

Tags :

Share via