சிவசங்கர் பாபா ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை அடுத்துள்ள கேளம்பாக்கத்தில் ஸ்ரீ சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளியை நடத்தி வந்தவர் சிவசங்கர் பாபா. அந்தப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் சிலர், சிவசங்கர் பாபா தங்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் கொடுத்தனர்.
இதன் அடிப்படையில் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கும் மாற்றப்பட்டது.
டெல்லியில் தலைமறைவாக இருந்த சிவசங்கர் பாபா, கடந்த சில வாரங்களுக்கு முன் கைது செய்யப்பட்ட சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், செங்கல்பட்டு மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு மேலும் ஒரு போக்சோ வழக்கும் பதிவு செய்யப்பட்டது.இந்நிலையில், தற்போது சிறையில் உள்ள சிவசங்கர் பாபா தரப்பில் ஜாமீன் கோரி அவரது உதவியாளர் சுஷ்மிதா என்பவர் செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த ஜாமீன் மனு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுவைச் செங்கல்பட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இரண்டு போக்சோ வழக்குகளிலும் சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
Tags :