தர்மபுரியில் மோட்டார் சைக்கிள்கள்-செல்போன்கள் திருட்டு
தர்மபுரியில் மோட்டார் சைக்கிள்கள்-செல்போன்கள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி நெடுமாறன் நகரை சேர்ந்தவர் மோகன் (வயது 47), லேத் பட்டறை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு தனது வீட்டின் முன்பு வைத்திருந்த இவரது மோட்டார் சைக்கிள் காணாமல் போய்விட்டது.
யாரோ மர்ம ஆசாமி இந்த மோட்டார் சைக்கிளை திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதேபோன்று தர்மபுரி நெல்லி நகரை சேர்ந்தவர் தங்கராஜ் (35), சம்பவத்தன்று இரவு இவரது மோட்டார் சைக்கிளும் காணாமல் போய்விட்டது.
இதேபோல் தர்மபுரி தெற்கு ரெயில்வே லைன் ரோட்டை சேர்ந்தவர் புகழேந்தி, இவரது மனைவி சத்யா (27), இவர் தனக்கு சொந்தமான ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை வீட்டில் வைத்திருந்தார். அந்த செல்போனை யாரோ மர்ம ஆசாமி திருடிச்சென்று விட்டார்.
மேலும் தர்மபுரி பிடமனேரி மோகன் மேஸ்திரி காலனியை சேர்ந்தவர் வெங்கடேசன் (46) என்பவருக்கு சொந்தமான ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் வீட்டில் வைத்திருந்த போது காணாமல் போய்விட்டது. மோட்டார் சைக்கிள்கள் மற்றும் செல்போன்கள் திருட்டு தொடர்பாக தர்மபுரி டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள்கள் மற்றும் செல்போன்கள் திருடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags :