கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 2 பேர் கொன்று புதைப்பு-முன்னாள் ராணுவவீரருடன் பெண் கைது

by Admin / 11-08-2021 02:50:28pm
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 2 பேர் கொன்று புதைப்பு-முன்னாள் ராணுவவீரருடன் பெண் கைது

 

முத்துச்சாமியும் அம்சவேணியும் அடிக்கடி தோட்டத்தில் உல்லாசமாக இருந்து வந்தனர்.

திருப்பூர் மாவட்டம் மூலனூர் அருகே உள்ள சுழிபெருக்கிபாளையத்தை சேர்ந்தவர் முத்துச்சாமி (வயது 77) முன்னாள் ராணுவ வீரர். இவரின் பக்கத்து தோட்டத்தை சேர்ந்த வேலுசாமி (47) என்பவருடன் முத்துச்சாமிக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டாக வேலுசாமியை காணவில்லை. முத்துசாமியின் தோட்டத்தில் வேலை செய்து வந்த அம்சவேணி என்பவரின் கணவர் ரவி (48) என்பவரும், கடந்த எட்டு மாதங்களாக காணவில்லை. ரவி மாயமானது குறித்து மனைவி அம்சவேணி கடந்த ஜனவரி மாதம் மூலனூர் போலீசில் புகார் செய்தார்.
 
புகாரின் பேரில் போலீசார் மாயமான ரவி குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் காணாமல் போன வேலுசாமி மற்றும் ரவி ஆகியோர் அடித்து கொலை செய்யப்பட்டதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதுதொடர்பாக முன்னாள் ராணுவ வீரர் முத்துசாமி மற்றும் ரவியின் மனைவி அம்சவேணியை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை அவர்கள் கூறியுள்ளனர்.
 
முன்னாள் ராணுவ வீரர் முத்துசாமிக்கும் பக்கத்து தோட்டத்தை சேர்ந்த வேலுச்சாமிக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மேலும் அம்சவேணியுடன் தோட்டத்தில் நெருக்கமாக இருந்ததையும் பார்த்துள்ளார். இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டு முத்துச்சாமி தனது தோட்டத்தில் வைத்து வேலுச்சாமியை அடித்து கொலை செய்து பிணத்தை எரித்துள்ளார்.

பின்னர் யாருக்கும் சந்தேகம் வராத வகையில் தோட்டத்திலயே குழி தோண்டி புதைத்துள்ளார். இந்த சம்பவங்களை முத்துசாமியின் கள்ளக்காதலி அம்சவேணி நேரில் பார்த்துள்ளார். இந்த தகவலை தனது கணவர் ரவியிடம் கூறியுள்ளார். ரவி இந்த கொலையை வெளியே சொல்லி விடுவதாக கூறி முத்துசாமியை மிரட்டி அடிக்கடி பணம் பறித்துள்ளார்.

இதற்கிடையே முத்துச்சாமியும் அம்சவேணியும் அடிக்கடி தோட்டத்தில் உல்லாசமாக இருந்தது வந்தனர். இந்த தகவல் ரவிக்கு தெரிந்ததும் அவர் மனைவியை கண்டித்துள்ளார். இதனால் கள்ளகாதலுக்கு இடையூராக இருந்த ரவியை முத்துசாமியும் அம்சவேணியும் சேர்ந்து கொலை செய்து புதைத்துள்ளனர். பின்னர் போலீசில் புகார் செய்து கணவரை காணவில்லை என நாடகம் ஆடியதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் முன்னாள் ராணுவவீரர் முத்துச்சாமி மற்றும் அம்சவேணியை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தோட்டத்து பகுதியில் கொன்று புதைக்கப்பட்ட வேலுச்சாமி மற்றும் ரவியின் உடலை இன்று தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via