திருச்செந்தூர் கோவில்  திருப்பதி கோவில் போன்று மாற்றப்படும்  - அறநிலையத்துறை ஆணையாளர் குமரகுருபரன் 

by Editor / 21-09-2021 04:34:00pm
திருச்செந்தூர் கோவில்  திருப்பதி கோவில் போன்று மாற்றப்படும்  -  அறநிலையத்துறை ஆணையாளர் குமரகுருபரன் 

 

தமிழக இந்துசமய அறநிலையத்துறை ஆணையாளர் குமரகுருபரன்  திருச்செந்தூர்  சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆய்வு மேற்கொண்டார். கோவில் வளாகத்தில் உள்ள விடுதிகள், கலையரங்கம், கார் பார்க்கிங், அன்னதானம் மண்டபம், கந்த சஷ்டி மண்டபம், நாழிகிணறு பஸ் நிலைய வளாகம், நாழிகிணறு நடைபாதை, கடற்கரை பகுதி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக அவர் ஆய்வு மேற்கொண்டார்.


பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருச்செந்தூர் அருள்மிகு  சுப்பிரமணிய சுவாமி கோவில் வளர்ச்சிக்கு மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டுள்ளது. ரூ.150 கோடியில் திருப்பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டோம். இப்பணிகள் நிறைவேற சுமார் 2 ஆண்டுகள் ஆகும். முக்கியமாக கார் பார்க்கிங் மாற்றப்படும். முழு நேர அன்னதானத்தில் கூடுதல் பக்தர்கள் அமர்ந்து சாப்பிடும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


கோவில் வளாகத்தில் உள்ள தேவையற்ற கட்டிடங்கள் அப்புறப்படுத்தபடும். இக்கோவில் 2 ஆண்டுகளில் திருப்பதி கோவில் போல் மாற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார். 


ஆய்வின் போது, திருச்செந்தூர் ஆலய இணைஆணையாளரும் தூத்துக்குடி மண்டல இணைஆணையாளருமான ம.அன்புமணி, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், போலீஸ் சூப்பிரண்டு ஜெயகுமார், உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங், பயிற்சி கலெக்டர் ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், திருச்செந்தூர் உதவி கலெக்டர் கோகிலா, தாசில்தார் முருகேசன்,  ஆலய உதவி ஆணையர் செல்வராஜ், உதவி செயற்பொறியாளர் முருகன், உதவி பொறியாளர் சந்தாணகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

 

Tags :

Share via