ஓடும் ரயிலில் 20 வயது பெண் கூட்டுப் பலாத்காரம். மேலும் 4 பேர் கைது

by Editor / 12-10-2021 11:45:11am
ஓடும் ரயிலில் 20 வயது பெண் கூட்டுப் பலாத்காரம். மேலும் 4 பேர் கைது

கடந்த 8ம் தேதி உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து மும்பையை நோக்கி புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. மும்பைக்கு 120 கி.மீ. தொலைவில் உள்ள லகத்புரி புரி நகரின் அருகே ரயில் சென்ற போது, சில கொள்ளையர்கள் பயங்கர ஆயுதங்களுடன் ஏசி பெட்டியில் ஏறியுள்ளனர். அதில் இருந்த பயணிகளிடம் இருந்து நகைகள் மற்றும் பணத்தை ஆயுதங்களை காட்டி மிரட்டி பிடுங்கினர்.

அதோடு, பெண் பயணி ஒருவரை 8 பேர் கொண்ட கும்பல் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். அப்போது, தடுக்க வந்த பயணிகளையும் பயங்கர ஆயுதங்களால் தாக்கினர். அதில் சில பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, கசாரா ரயில் நிலையம் வந்த போது, ரயில்வே பாதுகாப்பு படையினர் 4 பேரை கைது செய்தனர். எஞ்சிய 4 பேர் அங்கிருந்து தப்பியோடினர்.

இந்த நிலையில், தப்பியோடிய 4 பேரையும் போலீசார் இன்று கைது செய்துள்ளனர். குற்றவாளிகள் 8 பேர் மீதும் பாலியல் வன்கொடுமை, துன்புறுத்துதல், அத்துமீறல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

Tags :

Share via