சேலத்தில் சூட்கேசில் மசாஜ் சென்டர் நடத்தி வந்த பெண் சடலம்

by Editor / 16-10-2021 04:35:09pm
சேலத்தில் சூட்கேசில் மசாஜ் சென்டர் நடத்தி வந்த பெண் சடலம்

 

சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டியைச் சேர்ந்தவர் நடேசன். திமுகவிலிருந்து அதிமுகவில் இணைந்த முன்னாள் நகராட்சி கவுன்சிலரான இவர், குமாரசாமிபட்டியில் வீடுகள் கட்டி வாடைக்கு விட்டுள்ளார். இவரது வீட்டின் இரண்டாவது மாடியில் கர்நாடகாவைச் சேர்ந்த முகமது சதாம், தனது மனைவி தேஜஸ் மோண்டல் உடன் இரண்டு வீடுகள் எடுத்துத் தங்கியிருந்தார். சேலம் அழகாபுரம், பள்ளப்பட்டி, அஸ்தம்பட்டி ஆகிய இடங்களில் முகமது சதாம் - தேஜஸ் மோண்டல் தம்பதியினர் மசாஜ் சென்டர் நடத்திவந்தனர். ஒரு வீட்டில் கணவன் மனைவியும், இன்னொரு வீட்டில் மசாஜ் சென்டரில் பணிபுரியும் பெண்களும் தங்கியிருந்தனர்.


கடந்த 10 நாட்களுக்கு மேலாக கூடுதலாக 3 பெண்கள் தேஜஸ் மோண்டல் வீட்டுக்கு வந்து தங்கி மசாஜ் சென்டரில் வேலை செய்துவந்தனர் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சதாம் வேலை விஷயமாக சென்னை வந்துள்ளார். அதனையடுத்து, சென்னையிலிருந்து மனைவி தேஜஸை சதாம் அழைக்க அவர் செல்ஃபோனை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் வீட்டின் உரிமையாளர் நடேசனை தொடர்புகொண்ட சதாம், வீட்டில் சென்று பார்க்கச் சொல்லியுள்ளார். இதனையடுத்து வீட்டுக்குச் சென்ற நடேசன், சதாம் - தேஜஸ் தம்பதி தங்கியிருந்த வீட்டைப் பார்த்துள்ளார், அது பூட்டியிருந்துள்ளது. அருகில் மசாஜ் சென்டரில் பணிபுரியும் பெண்கள் தங்கியிருந்த வீட்டையும் பார்த்துள்ளார். அந்த வீடும் பூட்டப்பட்டிருந்தது. ஆனால் அந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதை அறிந்த நடேசன், காவல்துறைக்குத் தகவல் கொடுத்தார்.


அதனையடுத்து அங்கு வந்த போலீசார் வீட்டிற்குள் சென்று பார்க்கையில் வீட்டின் அலமாரியில் சந்தேகப்படும் வகையில் ஒரு பெரிய சூட்கேஸ் இருந்துள்ளதைக் கண்டு, அதனைத் திறந்து பார்க்கையில் உள்ளே பெண் சடலம் ஒன்று இருந்தது. அது தேஜஸ் மோண்டலின் உடல் என்பதை ஊர்ஜிதம் செய்த போலீசார், உடலை பிரேதப் பரிசோதனைக்காகச் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தடயவியல் நிபுணர்கள் கைரேகைகளை ஆய்வுசெய்து தடயங்கள் சேகரிக்கப்பட்டள்ளன. மேலும், இது தொடர்பாக தேஜஸின் கணவர் முகமது சதாமிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

 

Tags :

Share via