கொளத்தூர் தொகுதியில் 560 பயனாளிகளுக்கு ரூ.2.87 கோடி செலவில் நலத்திட்ட உதவிகள்

by Editor / 17-10-2021 03:53:22pm
கொளத்தூர் தொகுதியில் 560 பயனாளிகளுக்கு ரூ.2.87 கோடி செலவில் நலத்திட்ட உதவிகள்

கொளத்தூர் தொகுதியில் 560 பயனாளிகளுக்கு ரூ.2.87 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், பெரியார் நகர் மேம்படுத்தப்பட்ட அரசு புறநகர் மருத்துவமனையின் பயன்பாட்டிற்காக அவசரகால ஊர்தி, ஜி.கே.எம். காலனியிலுள்ள சென்னை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்கள், மேஜைகள் மற்றும் நாற்காலிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (16 ந் தேதி) கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட எவர்வின் பள்ளியில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், 16 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், 5 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி, 2 பயனாளிகளுக்கு வங்கிக் கடன் மானியம், 5 பயனாளிகளுக்கு தையல் எந்திரங்கள், 197 பயனாளிகளான முதியோர், கணவனால் கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகள், சாலை விபத்தில் உயிரிழந்த குடும்பத்தைச் சேர்ந்த 312 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதி, 5 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதி, கொரோனா தொற்றால் பெற்றோரில் ஒருவரை இழந்த 18 குழந்தைகளுக்கு நிவாரண நிதி, என மொத்தம் 560 பயனாளிகளுக்கு ரூ.2.87 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, கொளத்தூர், பெரியார் நகர், மேம்படுத்தப்பட்ட அரசு புறநகர் மருத்துவமனையின் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சார்பில் வழங்கப்பட்ட ஒரு அவசரகால ஊர்தியையும், கொரோனா தடுப்பூசி பணிக்காக 2 வாகனங்களின் சேவைகளையும் முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்து, 210 நபர்கள் அமரக்கூடிய மூன்று இருக்கைகள் கொண்ட 70 நாற்காலிகளையும் மருத்துவமனையின் பயன்பாட்டிற்காக வழங்கினார்.

34 ஆசிரியர்களுக்கு சிறப்பு

பின்னர், கொளத்தூர், ஜி.கே.எம்.காலனியிலுள்ள சென்னை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் 70 பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கி, 34 ஆசிரியர்களுக்கு சிறப்பு செய்தார்.

மேலும், அப்பள்ளிக்கு கட்டடம் கட்டுவதற்காக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சார்பில் 1 கோடி ரூபாய்க்கான காசோலையை தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் கே.வி. ராமமூர்த்தி, முதலமைச்சரிடம் வழங்கினார். அத்துடன் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் சார்பில் 1500 மாணவர்கள் அமரும் வகையில் 25 லட்சம் ரூபாய் மதிப்பில் அளிக்கப்பட்ட மேஜைகள் மற்றும் நாற்காலிகளையும் பள்ளியின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னை மாவட்ட கலெக்டர் விஜய ராணி, அரசு உயர் அலுவலர்கள், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் இயக்குநர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via