விரதங்களும்..விபரங்களும்

by Editor / 13-12-2021 09:29:09am
விரதங்களும்..விபரங்களும்

சுக்கிர வார ராகுகால விரதம் :

ராகுவால் ஏற்படும் பல்வேறுவிதமான தோஷங்கள் நீங்க 11 வெள்ளிக்கிழமைகளில் ராகுகாலத்தில் அமிர்தகடிகையில் அதாவது, காலை 11-30 முதல் 12 மணிக்குள் துர்க்கை அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபடலாம். 

கடைசிவாரம் அதாவது, பதினொன்றாவது வாரம் துர்க்கை அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்து மஞ்சள், பூ, தாலிக்கயிறு, வெற்றிலை பாக்கு, பழ வகைகள், முழுத்தேங்காய், சர்க்கரைப் பொங்கல் வைத்து உங்களால் எத்தனை சுமங்கலிகளுக்கு கொடுக்க முடியுமோ அத்தனை பேருக்கு தரலாம்.

மங்களவார ராகுகால விரதம் :

இந்த விரதத்தை செவ்வாயுடன் ராகு சேர்ந்துள்ள ஜாதகர்கள் செய்யலாம். செவ்வாய்க்கிழமை ராகுகாலத்தில் அமிர்தகடிகையில் அதாவது, மாலை 4 முதல் 4.30 மணிக்குள் துர்க்கை அம்மனுக்கு சிவப்பு புடவை சாற்றி எலுமிச்சம் பழம் மாலை போட்டு வணங்கலாம். எலுமிச்சம் சாதம் நற்சீரக பானகம் ஆகியவற்றை கோயிலில் பக்தர்களுக்கு விநியோகம் செய்யலாம்.

பஞ்சமி திதி:

ராகு பரிகாரத்திற்கு மிகவும் சிறப்பான நாளாக பஞ்சமி திதி சொல்லப்பட்டுள்ளது. பஞ்சமி திதியன்று புற்றுள்ள அம்மன் கோயிலுக்கு சென்று புற்றுக்கு பால் வார்த்து வழிபடலாம். அத்துடன் அம்மன் சந்நதியில் பெயர், நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்து கோயிலில் பக்தர்களுக்கு உளுந்துவடை விநியோகம் செய்யலாம்.

பைரவர் வழிபாடு:

ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு விபூதி அபிஷேகம் செய்தால் சர்வ தோஷ நிவாரணம் உண்டு. வெள்ளிக்கம்பியில் உளுந்துவடை மாலை கோத்து பைரவருக்கு அணிவிக்கலாம்.

திருவாதிரை வழிபாடு:

ஒவ்வொரு மாதமும் திருவாதிரை நட்சத்திர நாளில் ஸ்ரீபெரும்புதூர் சென்று ஸ்ரீராமானுஜரை வழிபட்டால் சகலதோஷ தடைகள் நீங்கும். திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ராமானுஜரையும் தரிசிக்கலாம்.

 

Tags :

Share via