காதல் ஜோடி ஓட்டம் - வாலிபரின் தாயாருக்கு அடி உதை.

by Writer / 26-01-2022 08:17:07pm
காதல் ஜோடி ஓட்டம் - வாலிபரின் தாயாருக்கு அடி உதை.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கே. வாகைக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் மீனாட்சி (வயது 45). இவரது மகன் சக்தி சிவா (24). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.


இவரும், அவரது சொந்த ஊரை சேர்ந்த புவனேசுவரி (19) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு இருவீட்டிலும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் காதல் ஜோடியான சக்தி சிவா-புவனேசுவரி கடந்த 22-ந் தேதி ஊரைவிட்டு சென்றுவிட்டனர்.


இருவீட்டாரும் அவர்களை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையில் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சக்தி சிவாவும், புவனேசுவரியும் தஞ்சம் அடைந்தனர். இந்த தகவல் இருவீட்டாருக்கும் தெரியவந்தது. உடனே புவனேசுவரியின் தாயார் சுதா ஆத்திரமடைந்து, சக்தி சிவா வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கிருந்த சக்தி சிவாவின் தாயார் மீனாட்சியை வீட்டிலிருந்து வெளியே இழுத்து வந்தார்.


சுதா மற்றும் சிலர் சேர்ந்து, மின்கம்பத்தில் மீனாட்சியை கட்டி வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் பரளச்சி போலீசார் விரைந்து வந்தனர். மீனாட்சியை மீட்டு விசாரணை நடத்தினார்கள்.


இதுகுறித்து மீனாட்சி கொடுத்த புகாரின் பேரில் சுதா மற்றும் அவருடைய உறவினர்கள் 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

 

Tags :

Share via