இளம்பெண் ஏமாற்றி பணம் பறித்ததால் வாலிபர் தற்கொலை

by Admin / 31-01-2022 02:16:49pm
இளம்பெண் ஏமாற்றி  பணம் பறித்ததால் வாலிபர் தற்கொலை

ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் கொப்பிசெட்டிவாரிப்பள்ளியை சேர்ந்தவர் சங்கர் ராவ் (வயது 35). இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் சங்கர் ராவுக்கு அவரது பெற்றோர் மறுமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
 
சங்கர் ராவ் தானே ஒரு நல்ல பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக பெற்றோரிடம் கூறினார். இதற்கு அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் சங்கர் ராவ் அதே பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவரை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தார். காதலிக்காக கடந்த 2 ஆண்டுகளில் நகை, பணம் என லட்சக்கணக்கில் செலவு செய்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இளம்பெண் சங்கர் ராவின் வாட்ஸ் அப் மற்றும் செல்போன் எண்ணை பிளாக் லிஸ்டில் போட்டுள்ளார். இதையடுத்து சங்கர்ராவ் நேற்று முன்தினம் வேறு ஒரு செல்போன் எண்ணிலிருந்து இளம்பெண்ணை தொடர்பு கொண்டார்.

அப்போது இளம்பெண் உன்னை திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை என தெரிவித்தார். ஏற்கனவே திருமணம் செய்த மனைவியும் இறந்து விட்டார். காதலியும் தன்னிடம் பணத்தைப் பறித்துக் கொண்டு ஏமாற்றி விட்டதால் சங்கர் ராவ் வாழ்க்கையில் விரக்தி அடைந்தார்.

அவர் தனது செல்போனில் வாட்ஸ்அப் குரூப்பை ஏற்படுத்தி அதில் தன்னுடைய நண்பர்களை சேர்த்துள்ளார். நேற்று முன்தினம் இரவு தான் தற்கொலை செய்யப்போவதாக தனது வாட்ஸ்அப் குரூப்பில் நண்பர்களுக்கு வீடியோ அனுப்பினார். 

இதனைக்கண்ட அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து அவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்டனர். சங்கர் ராவின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இதையடுத்து அவரது நண்பர்கள் சங்கர் ராவின் வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டில் உள்ள அறையில் மின்விசிறியில் சங்கர்ராவ் தூக்கில் தொங்கினார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சங்கர் ராவின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலிப்பதாக கூறி நகை, பணம் பறித்ததால் வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via