முன்னாள் அதிமுக அமைச்சர் நிலோபர் கஃபீல் நீக்கம்  ஏன்? ரூ.பல லட்சம் மோசடி செய்ததாக புகார் 

by Editor / 22-05-2021 08:30:53pm
முன்னாள் அதிமுக அமைச்சர் நிலோபர் கஃபீல் நீக்கம்  ஏன்? ரூ.பல லட்சம் மோசடி செய்ததாக புகார் 

 

தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சராக 2016-21 காலகட்டத்தில் நிலோபர் கஃபீல் பதவி வகித்தார். திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவருக்கும் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கும் இடையில் மோதல்கள் இருந்து வந்தன. இதனால்; சட்டமன்றத் தேர்தலில் நிலோபருக்கு சீட் வழங்கப்படவில்லை.
 இந்நிலையில், பிரகாசம் என்பவர் அளித்துள்ள மோசடிப் புகாரால் அ.தி.மு.கவின் அடிப்படை உறுப்பினர் என்ற பொறுப்பில் இருந்தே நிலோபர் நீக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக, அ.தி.மு.க தலைமைக் கழகம்  வெளியிட்டுள்ள அறிவிப்பில், ` கட்சியின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் நிலோபர் கஃபீல் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார். கட்சியினர் யாரும் அவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கேட்டுக்கொள்கிறோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வேலூர் மாவட்டத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இது தொடர்பாக நிலோபர் கஃபீல் மீது புகார் கொடுத்த பிரகாசத் கூறியது,`` நான் அவரிடம் ஐந்து ஆண்டுகளாக உதவியாளராக இருந்து வந்தேன். தொழிலாளர் நலத்துறை தொடர்பான பணிகளில் அவர் நேரடியாக பணம் வாங்க முடியாது என்பதால், என்னை வாங்கிக் கொள்ளச் சொல்வார். அந்தப் பணத்தை கோவையைச் சேர்ந்த அவரது உறவினர் ஜாபர் மற்றும் மகன், மருமகன், சம்பந்தி ஆகியோரிடம் கொடுப்பேன். அதனால் சில வேலைகள் நடந்தன. சில வேலைகள் நடக்காமல் போய்விட்டன.
கடைசியில் அவருக்கு தேர்தலில் சீட் வழங்கப்படவில்லை. இதனால் அவரிடம் வேலைக்காக பணம் கொடுத்தவர்கள் எல்லாம் நெருக்குதல்கள் கொடுக்கத் தொடங்கிவிட்டனர். அவரிடம் கேட்டபோது, `நம்ம அரசுதான் வரும்' எனக் கூறி வந்தார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பணம் கொடுத்தவர்கள் எல்லாம் என்னை மிரட்டத் தொடங்கினர்.
நிலோபரிடம் கேட்டபோது, `பார்த்துக் கொள்ளலாம்' என்று தொடர்ந்து கூறி வந்தார். அவரிடம் பணம் உள்ளது. பணம் கொடுக்கிறேன் என்றுதான் கூறிவந்தார். நாளடைவில் அவருடைய போக்கு மாறிவிட்டது. இந்த சம்பவத்தால் மனதளவில் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகிவிட்டேன். அவருடன் இருந்த வரையில் என்னை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொண்டார். பணத்தை அவர் செட்டில் செய்துவிட்டால் மன உளைச்சலில் இருந்து தப்பித்துவிடுவேன் நான் ஒரு வேலைக்காரன்தான். அவர் பணம் வாங்கிக் கொடு என்றால், வாங்கிக் கொடுப்பேன். எந்த ஒரு துண்டுச் சீட்டிலும் எழுதி வைத்துக் கொள்வதைக்கூட அவர் விரும்ப மாட்டார். அவர் மீதான நம்பிக்கையில்தான் பணம் வாங்கிக் கொடுத்தேன். இதுதொடர்பாக, போலீஸ் டி.ஜி.பியிடம் புகார் மனு கொடுத்துள்ளேன். எனது புகாரின்பேரில் முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
காவல்துறை தலைமை இயக்குநரிடம் பிரகாசம் அளித்துள்ள 10 பக்க புகார் மனுவில், ` "2016 சட்டமன்றத் தேர்தலில் நிலோபர் கஃபீலுக்கு பணரீதியாக உதவி செய்ததால், என்னை அரசியல் உதவியாளராக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதால், அவரிடம் பணி செய்து வந்தேன். இந்நிலையில், அமைச்சரின் துறை சார்ந்த தொழிலாளர் நலத்துறையில் வேலைக்காகவும் தமிழ்நாடு வக்ஃபு வாரியம் சார்ந்த வேலைக்காகவும் சிலர் என்னிடம் அமைச்சர் கொடுக்கச் சொன்னதாக காசோலை மற்றும் ரொக்கமாகப் பணம் கொடுத்தனர்.
என் வங்கிக் கணக்கிற்கு பணப் பரிமாற்றம் நடைபெற்ற பின்பு அமைச்சர் யாருடைய வங்கிக் கணக்குக்கு பணப் பரிமாற்றம் செய்ய உத்தரவிடுவாரோ, அந்த வங்கிக் கணக்குக்குப் பணத்தை பரிமாற்றம் செய்வேன். இந்தப் பணத்தை அவருடைய குடும்ப நபர்கள், நெருங்கிய உறவினர்கள் மற்றும் அவர் சொல்லும் நபர்களிடம் அவர் முன்னிலையில் கொடுத்து வந்தேன்.
ஆனால், அரசுத் துறையில் எந்த வேலைகளும் நடக்காததால் பணம் கொடுத்தவர்கள் என்னிடம் நேரில் கேட்டனர். இதற்கு, `கொரோனா தொற்று நோய் அதிகமாக இருப்பதால் அரசாங்கத்தால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை என நிலோபர் கூறிவந்தார்" என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்பின்னர், அம்பூர்பேட்டை ஜெகதீசன் என்பவர் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி ஆன்லைன் மூலம் வாணியம்பாடி நகர காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். இதுதொடர்பாக, நிலோபர் கஃபீலிடம் பேசியும் எந்தப் பதிலும் இல்லை. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் அவர் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.கடந்த மே மாதம் 3 ஆம் தேதி காவல்துறை தலைமை இயக்குநரிடம் இந்தப் புகார் மனுவை பிரகாசம் அளித்துள்ளார். இதன்பேரில் காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் என்பதை அறிந்தே, நிலோபரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தே அ.தி.மு.க தலைமை நீக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, முன்னாள் அமைச்சர் நிலோபர் கஃபீல் கூடியபோது இது தவறான புகார் என்று மறுப்பு தெரிவித்துள்ளார். 

 

Tags :

Share via