பொதுமக்களை துரத்தித் துரத்தி வெட்டிய 5 இளைஞர்கள் கைது

by Editor / 09-05-2022 09:56:20pm
பொதுமக்களை துரத்தித் துரத்தி வெட்டிய 5 இளைஞர்கள் கைது

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அடுத்துள்ள பிரூடி காலனியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு செல்லும் இவர் தனது வீட்டருகே இளைஞர்களுக்கு வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார். அதிலுள்ள ஓரு வீட்டில் பனியன் தொழிற்சாலைக்கு வேலைக்குச் செல்லும் திருநெல்வேலியைச் சேர்ந்த சிவா என்ற இளைஞர் தங்கியுள்ளார். இவருக்கு நேற்று பிறந்தநாள் என்பதால் இவரது நண்பர்களான திருநெல்வேலியைச் சேர்ந்த ஹரிஹரன், முத்துவேல், சங்கர், ராஜா, முருகன் ஆகியோர் இவரது வீட்டிற்கு வந்து நேற்று முன்தினம் இரவு முழுவதும் மதுஅருந்தியதோடு கஞ்சா பயன்படுத்தி போதையில் கூச்சலிட்டபடி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை வீட்டின் உரிமையாளர் சண்முகசுந்தரம் கண்டித்துள்ளார்.

இதையடுத்து நேற்று காலை சிவா திருநெல்வேலிக்குச் சென்ற நிலையில் போதை மயக்கத்திலிருந்த அவரது நண்பர்கள் 5 பேரும் மீண்டும் மதியம் 2 மணியளவில் அரிவாள், கத்தி கம்புகளுடன் இவர்களை கண்டித்த வீட்டின் உரிமையாளர் சண்முகசுந்தரத்தையும், அவரது மனைவி பூர்ணிமா மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்டு தடுக்க வந்த பக்கத்து வீட்டுகாரர் ஷ்யாம் என்பவரை துரத்தித் துரத்தி வெட்டியுள்ளனர். இதில் அவருக்கும் படுகாயம் ஏற்பட்டுள்ளது. போதை தலைக்கேறிய நிலையில், வீதியில் அரிவாளுடன் சுற்றிய 5 பேரும் அங்கிருந்த பொதுமக்களையும் மிரட்டியதோடு, சாலையில் வந்து கொண்டிருந்த அபி, சசி, பிருந்தா, தர்ணிகா உள்ளிட்டவர்களையும் தாக்கியதில் அவர்களுக்கும் படுகாயங்கள் ஏற்பட்டன. இதைத் தொடர்ந்து அங்கு வந்த முன்னாள் கவுன்சிலர் முத்துலட்சுமி என்பவரை தாக்கியதுடன், அவரை அரிவாளால் வெட்ட துரத்தியுள்ளனர். அவர் வீட்டிற்குள் சென்று கதவை தாழிட்டதால் அவர்கள் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள், போர்டிகோவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றையும் அடித்து நொறுக்கியுள்ளனர். இதையடுத்து தகவலறிந்த பெரியநாயக்கன்பாளையம் காவல்நிலைய ஆய்வாளர் அன்னம் தலைமையிலான போலீசார் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இவர்களை பிடிக்க முற்பட்டனர். இவர்கள் 5 பேரும் போலீசாரை கண்டதும் தப்பித்து ஓடியுள்ளனர். இறுதியில் இவர்களை பிடித்த பொதுமக்கள் நையப்புடைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். கிட்டதட்ட 3 மணிநேரம் நடந்த இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேருக்கும் பொதுமக்கள் தாக்கியதில் பலத்தகாயம் ஏற்பட்டது. இவர்களும், படுகாயமுற்ற பொதுமக்களும், சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

பொதுமக்களை துரத்தித் துரத்தி வெட்டிய 5 இளைஞர்கள் கைது
 

Tags : 5 youths arrested for chasing civilians

Share via