பிரிந்த தாய்-தந்தை ஒன்று சேர வேண்டும் என்று மகன் தற்காலை

by Staff / 17-05-2022 02:50:14pm
பிரிந்த தாய்-தந்தை ஒன்று சேர வேண்டும் என்று மகன் தற்காலை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த சிங்களாந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவி- மேகலா தம்பதியரின் மகன் தருண். இவர் மெட்டாலா அடுத்த ராஜபாளையத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் உயிரியல் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் வீட்டில் குடும்பத்தகராறு காரணமாக கடந்த சில தினங்களாகவே மன அழுத்தத்தில் இருந்து உள்ளார். நேற்று இரவு தூங்குவதாக சென்ற மாணவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மேலும் தற்கொலைக்கு முன்பு எழுதிய கடிதத்தில் தாய்-தந்தை தனது சாவிலாவது ஒன்று சேர வேண்டும் என்றும், தனது அம்மா மற்றும் அக்காவை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறும், நான் எங்கும் செல்லவில்லை வீட்டின் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பேன் என கடிதம் எழுதி வைத்திருக்கிறார்.குடும்பத்தினர் காலையில் எழுந்து பார்க்கும்போது மாணவர் தருண் தூக்கில் தொங்கியவாறு இருந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த, காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தருண் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய கடிதத்தைப் காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இன்று 12ம் வகுப்பு தேர்வு நடைபெறும் நிலையில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via