புத்தகம் வழங்கி வாசிக்கத் தூண்டும் இளைஞர்!

by Editor / 30-05-2021 08:46:30am
புத்தகம் வழங்கி வாசிக்கத் தூண்டும் இளைஞர்!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட் டையை அடுத்த செம்பாளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஸ்குமார்(31). செல்போன் விற்பனை கடை நடத்தி வருகிறார். புத்தகப் பிரியரான இவர், 700-க்கும் மேற்பட்ட புத்தகங்களை சேகரித்து, தனது வீட்டு மாடியில் செம்மொழி வாசிப்பகம் என்ற பெயரில் சிறியளவிலான நூலகத்தை வைத்துள்ளார். இந்த நூலகத்தில், அரசியல், சுதந்திரப் போராட்டம், இலக்கியம், சிறுகதைகள், போட்டித் தேர்வு உள்ளிட்டவை தொடர்பான புத்தகங்கள் உள்ளன.

தற்போது, கரோனா ஊரடங்கு காரணமாக வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் இளைஞர்கள், சிறுவர்கள் உள்ளிட்டோர் மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இதைக் கருத்தில்கொண்டு, அவர்களின் நேரத்தை பயனுள்ளதாக மாற்றும் வகையில், சதீஸ்குமார் அவர்களின் வீட்டுக்கேச் சென்று புத்தகங்களைக் கொடுத்து, வாசிக்கச் செய்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறியபோது, 'வீடுகளுக்கே தேடிச் சென்று நான் புத்தகங்களை வழங்கி வரும் நிலையில், சிலர் என் வீட்டுக்கே வந்து தேவையான புத்தங்களை வாங்கி வாசிக்கின்றனர். எனது கிராமத்தில் முன்மாதிரியான ஒரு நூலகத்தை உருவாக்க திட்டமிட்டுளேன்' என்றார்

 

Tags :

Share via