ஒமான் நாட்டில் சிக்கியுள்ள குமரி மீனவர்கள் 8 பேர் விரைவில் நாடு திரும்புகின்றனர் - விஜய் வசந்த் எம்.பி. தகவல்
ஒமான் நாட்டில் வேலைக்குச் சென்ற குமரி மாவட்ட மீனவர்கள் 8 பேர் தாய் நாட்டிற்குத் திரும்ப முடியாமல் தவித்து வந்தனர். அவர்களது பாஸ்போர்ட் அவர்களை வேலைக்கு அழைத்துச்சென்ற நிறுவனம் அபகரித்து வைத்திருந்தது. நாட்டிற்குத் திரும்ப வழியின்றி தவித்த இந்த மீனவர்களின் நிலைமை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.விஜய் வசந்த் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.விஜய் வசந்த் அவர்கள் 8 மீனவர்களையும் தாயகம் அழைத்து வர முயற்சிகள் மேற்கொண்டார். இது குறித்து ஒமான் நாட்டிலுள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு மீனவர்களின் நிலைமையைக் கேட்டறிந்தார். மேலும் நேற்றைய தினம் வெளியுறவுத் துறை அமைச்சரைச் சந்தித்த போதும் இந்த பிரச்சனையை எடுத்துக் கூறினார். இந்நிலையில் தூதரக அதிகாரிகள் திரு.விஜய் வசந்த் அவர்களைத் தொடர்பு கொண்டு மீனவர்களின் நிலைமை குறித்து விளக்கினர். மீனவர்கள் நலமாகத் தூதரக கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அவர்கள் வேலை செய்த நிறுவனத்திடம் தொடர்பு கொண்டு அவர்களுக்கு உரியத் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் 8 மீனவர்களும் விரைவில் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தனர். அபராதம் எதுவும் விதிக்காமல் அவர்கள் இந்தியா திரும்புவர் எனவும் தூதரக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.
Tags :