எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விரைவில் ஆன்லைன் விண்ணப்பங்கள்

by Staff / 13-09-2022 01:54:48pm
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விரைவில் ஆன்லைன் விண்ணப்பங்கள்

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஓரிரு நாளில் தொடங்கும் என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 70 மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை ஒவ்வோர் ஆண்டும் மருத்துவக் கல்வி இயக்குநரகம் நடத்தி வருகிறது. 2022-2023-ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் கடந்த 7-ம் தேதி வெளியான நிலையில், மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான அறிவிப்பை இதுவரை மருத்துவக் கல்வி இயக்குநரகம் வெளியிடவில்லை.

இந்நிலையில், அறிவிப்புக்கான தாமதம் குறித்து விளக்கமளித்த மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள், நீட் தேர்வில் தமிழ்நாட்டில் இருந்து தேர்ச்சி பெற்ற 67,000 மாணவர்களின் முழு விவரங்களை தேசிய தேர்வு முகமை இதுவரை தராததால், கலந்தாய்வுக்கான பணிகள் தாமதமாகி வருவதாகவும், ஆன்லைன் விண்ணப்ப பதிவை ஓரிரு நாட்களில் தொடங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அரசின் அனுமதியைப் பெற்று விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவித்தனர்.

மேலும் கலந்தாய்வை ஆன்லைனில் நடத்துவதற்கும், நேரடியாக நடத்துவதற்கும் தயாராக இருப்பதாகவும், அரசு எப்படி நடத்த வேண்டும் என்று உத்தரவிடுகிறதோ, அந்த முறையில் கலந்தாய்வு நடத்தப்படும் என்றும் மருத்துவக் கல்வி இயக்குநரக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
 

 

Tags :

Share via