ரேஷன் அரிசியை விரும்பாத மக்கள் அதனை வாங்கி வீணாக்க வேண்டாம் முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன்

by Staff / 15-09-2022 02:49:43pm
ரேஷன் அரிசியை விரும்பாத மக்கள் அதனை வாங்கி வீணாக்க வேண்டாம்  முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன்

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் தமிழக அரசின் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன் அதிகாரிகளுடன் தமிழக அரசின் நியாய விலை கடைகளுக்கு அனுப்பப்படும் அரிசி உற்பத்தி செய்யப்படுவதை VKB நவீன அரிசி ஆலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து விவரங்களை கேட்டறிந்தார். அவரிடம் உற்பத்தி செலவு அதிகரிப்பதால் தமிழ்நாடு அரிசி சங்க மாநில தலைவர் துளசிங்கம் கோபி அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு தமிழக அரசு மூட்டை ஒன்றுக்கு அரசு அரிசி உற்பத்தி செய்து தர 40 ரூபாய் அரவை கூலி வழங்கி வரும் நிலையில் 100 ரூபாய் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

பின்னர் அங்குள்ள மருதம் பல்பொருள் அங்காடி மற்றும் மேலாண்மை பயிற்சி வகுப்புகளை பார்வையிட்டுஆய்வு செய்த அவர் மருதம் பல்பொருள் அங்காடியில் விற்கப்படும் பொருள்களின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், ரேஷன் அரசியை மெருகேற்றி கடத்தலில் ஈடுபட்ட வழக்கில் தொடர்புடைய சக்கரவர்த்தியை தேடி வருவதாகவும் சுமார் 100டன் ரேசன் அரிசி, 3500கிலோ கோதுமை கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் துணை போகும் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் பெரும் கடத்தல்காரர்களை கைது செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறினார்.

மேலும், தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தலில் இதுவரை 11, ஆயிரத்து 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், குண்டர் சட்டத்தில் 113 பேரை சிறையில் அடைத்து உள்ளதாகவும் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 2962 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் 63 பேரை கைது செய்துள்ளதாகவும் எட்டு பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ரேஷன் அரிசியை வாங்கி பயன்படுத்தாத பொதுமக்கள் அதை சிறு வியாபாரிகள் கடைகளுக்கு விற்கக் கூடாது. நல்ல திட்டத்தை முறையாக பொதுமக்கள் செயல்படுத்த உதவ வேண்டும் அரிசியை உண்ண விரும்பாதவர்கள் அதனை வாங்க வேண்டாம் என கோரிக்கை வைத்தார். வருவாய்த்துறை கூட்டுறவுத்துறை உணவு பாதுகாப்பு துறை காவல் துறை ஆகியோருடன் இணைந்து ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தேவையான நடவடிக்கை மேற்கொண்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

 

Tags :

Share via