குழந்தைகளை கழுத்தை நெரித்து கொன்று தூக்கில் தொங்கிய தந்தை

by Staff / 22-09-2022 03:04:52pm
குழந்தைகளை கழுத்தை நெரித்து கொன்று தூக்கில் தொங்கிய தந்தை

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு தூக்கில் தொங்கினார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சம்பவம் நடந்த போது வீட்டில் யாரும் இல்லை. மூவரின் உடல்களும் ஜோத்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தையடுத்து அந்த கிராமத்தில் சோகம் நிலவுகிறது.

இதுகுறித்து காவல் நிலைய அதிகாரி மனோஜ் குமார் பரிஹார் கூறுகையில், ரூபாராம் படேல் மற்றும் அவரது இரண்டு மகன்களின் உடல்கள் இரவில் அறையில் கண்டெடுக்கப்பட்டன. வீட்டுக்கு வந்து பார்த்தபோது அறையின் கதவுக்கு அருகில் தனது இரு மகன்களின் சடலங்கள் கிடப்பதைக் கண்டதாக இறந்தவரின் மனைவி போலீசாரிடம் தெரிவித்தார்.

சிறிது தொலைவில், அவரது கணவர் மாட்டுக்கொட்டகைக்குள் தூக்கில் தொங்கினார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மனைவி அலறியுள்ளார். இதையறிந்த அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

விசாரணையில், ரூபாராம் படேல் விவசாயியாக வேலை செய்து வந்தது தெரியவந்தது. தற்கொலை செய்த அன்று மனைவியுடன் வயல் வேலைக்குச் சென்றுள்ளார். ஆனால் அவர் தனது மனைவிக்கு முன்பே வீட்டிற்கு வந்துவிட்டார். முதலில் தனது இரு மகன்களையும் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.

குடும்ப தகராறு காரணமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு மூவரின் உடல்களும் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via