14 வயது சிறுமிக்கு திருமணம்-பெற்றோர் உள்பட 5 பேர் கைது

by Editor / 02-12-2022 08:06:55am
14 வயது சிறுமிக்கு திருமணம்-பெற்றோர் உள்பட 5 பேர் கைது

சேலம் மாவட்டம் ஏற்காடு நல்லூர் பகுதியை சேர்ந்தவர் வெள்ளையன். இவருடைய மகன் அன்பழகன் (வயது 32). இவருக்கும், ஏற்காடு பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கும் கடந்த சில நாட்களுக்கு முன் திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த குழந்தை திருமணம் குறித்து சிலர் கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1098 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு குழந்தைகள் நல ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர்.

இதன் பேரில் குழந்தைகள் நல ஆணைய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கிராமத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் 14 வயது சிறுமிக்கு, 32 வயது நபருடன் திருமணம் செய்து வைக்கப்பட்டது உறுதியானது.

இது குறித்து சேலம் கொண்டலாம்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில், குழந்தை திருமணம் செய்த அன்பழகன், அவரது தந்தை வெள்ளையன், தாய் வெள்ளாயி மற்றும் சிறுமியின் தந்தை, தாய் ஆகிய 5 பேர் மீது குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து அனைத்து மகளிர் போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர். இதனிடையே அந்த சிறுமியை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via