11 மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு.

by Editor / 16-12-2022 08:34:33am
11 மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு.

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (வெள்ளிக்கிழமை) தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, கோவை, நீலகிரி, விழுப்புரம், கடலூர், தர்மபுரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 - 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 - 24 டிகிரி செல்சியஸ் அளவில் பதிவாகும்.

மேலும், வரும் 17ஆம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via