ரயில்வே பெண் ஊழியரை கற்பழிக்க முயற்சி - தென்காசியில் பெரும் பரபரப்பு.

by Editor / 17-02-2023 08:45:35am
 ரயில்வே பெண் ஊழியரை கற்பழிக்க முயற்சி - தென்காசியில் பெரும் பரபரப்பு.

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் பகுதியில் உள்ள தென்காசி - நெல்லை நெடுஞ்சாலைக்கு இடையே ரயில்வே கேட் ஒன்று உள்ளது.

 இந்த ரயில்வே கேட்டில் நேற்று இரவு கேட் கீப்பராக கேரளாவை சேர்ந்த நித்தியா சந்திரன் (வயது 33) என்ற பெண் பணியாற்றி வந்துள்ளார்.

சுமார் 8.30 மணிக்கு திருநெல்வேலி - செங்கோட்டை ரயில் அந்த பகுதியை கடந்த பின்பு கேட் கீப்பர் ஒய்வு எடுக்கும் அறையின் ஒருபுற கதவை நித்யாசந்திரன் அடைத்துவிட்டு உள்ளே ஒய்வு எடுத்து கொண்டிருந்துள்ளார்.

இந்த நிலையில், இதை நோட்டமிட்டு கொண்டிருந்த மர்ம நபர் ஒருவர் அறைக்குள் புகுந்து கேட் கீப்பராக இருந்த கேரளாவை சேர்ந்த அந்தப் பெண்ணை கற்பழிக்க முயற்சி செய்துள்ளார்.

 திடீரென ஒரு நபர் உள்ளே புகுந்து தன்னை மானபங்கப்படுத்த முயற்சி செய்த சம்பவம் அந்த பெண்ணுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய சூழலில், அச்சத்தில் 'காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்' என்று கூச்சலிட்டு உள்ளார்.

 உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தபோது பொதுமக்களை பார்த்த அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.

இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பாவூர்சத்திரம் போலீசார் அந்த பகுதியில் வேறு யாரேனும் சந்தேகப்படுபடியான நபர்கள் உள்ளார்களா? என தேடி பார்த்தனர்.

 ஆனால், யாரும் போலீசார் பிடியில் சிக்காத நிலையில் ரயில்வே பணியாளரான அந்த பெண்ணை போலீசார் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தொடர்ந்து, சம்பவம் குறித்து தகவல் அறிந்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் சம்பவ இடத்திற்கு வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார்.

 இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் சூழலில், பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பெண் ஊழியரை மர்ம நபர் ஒருவர் கற்பழிக்க முயற்சி செய்த சம்பவம் தென்காசி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories