கர்ப்பிணி திடீர் மரணம்

by Staff / 20-02-2023 01:58:45pm
 கர்ப்பிணி திடீர் மரணம்

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி சந்தப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கிர்த்திவர்மன். பூ வியாபாரி. இவரது மனைவி நிஷாந்தினி (வயது 22). இவர்களுக்கு ஏற்கனவே 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் 2-வது பிரசவத்திற்காக மனைவி நிஷாந்தினியை நேற்று முன்தினம் காலை வீரபாண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது அங்கிருந்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள், அரை மணி நேரத்தில் குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளது என தெரிவித்தனர். இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு டாக்டர்கள் நிஷாந்தினிக்கு உடனடியாக சிகிச்சை அளிக்காமல் கால தாமதம் செய்ததாக கூறப்படுகிறது.பிரசவ வழியில் துடித்த நிசாந்தினி, சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். முறையான சிகிச்சை அளிக்காததாலும், கால தாமதம் செய்ததாலும் தான் நிஷாந்தினி உயிரிழந்துள்ளார் எனக் கூறி உறவினர்கள் மருத்துவமனையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்ட சுகாதாரதுறை அதிகாரிகளும், கர்ப்பிணி பெண் இறந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், நிஷாந்தினி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தில் பணியில் இருந்த டாக்டர்களிடம் இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் கேட்டுள்ளது.

 

Tags :

Share via