ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்  இன்று வாக்கு எண்ணிக்கை துவங்கியது.

by Editor / 02-03-2023 08:27:34am
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்  இன்று வாக்கு எண்ணிக்கை துவங்கியது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கடந்த 27ம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. வேட்பாளராக எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா நவநீதன் உள்பட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

238 வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது. 77 வேட்பாளர்கள் போட்டியில் இருந்ததால் 5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அமைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது. 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்களில் 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 பேர் ஓட்டுச்சாவடிகளில் வாக்களித்தனர். இது 74.79 சதவீதமாகும். இதுதவிர வாக்குப்பதிவுக்கு முன்பே 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டுகள் பதிவு செய்தனர்.

வாக்குப்பதிவு முடிந்த பின்னர் மின்னணு ஓட்டுப்பெட்டிகள் அனைத்தும் சித்தோட்டில் உள்ள ஈரோடு அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு இருக்கிறது. மூடி முத்திரையிடப்பட்ட காப்பு அறையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் வி.வி.பேட் கருவிகள் வைக்கப்பட்டு இருக்கின்றன. காப்பு மையத்தின் உள்ளே பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதுமட்டுமின்றி வாக்குப்பதிவு எந்திரங்கள் காப்பு அறை, வாக்கு எண்ணிக்கை அறைகளை சுற்றி துணை ராணுவப்படை வீரர்கள், தமிழ்நாடு சிறப்புப்படை துப்பாக்கி ஏந்திய வீரர்கள், ஆயதப்படை மற்றும் ஈரோடு மாவட்ட போலீசார் என்று மொத்தம் 5 அடுக்குகள் கொண்ட பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு துவங்கியது.வாக்குப்பதிவு எந்திரங்கள் காப்பு அறை சீல் திறக்கப்பட்டு மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான எச்.கிருஷ்ணனுண்ணி முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு செல்லப்பட்டன. வாக்கு எண்ணிக்கை பணியில் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட உள்ளனர்.முதலில் தபால் வாக்குகள் என்னும் பணிகள் தொடங்கியுள்ளன.

 

Tags :

Share via