சொத்திற்காகவும் பணத்திற்காகவும் பெற்ற தாயை கார் ஏற்றி கொலை செய்த கொடூர மகன்

by Staff / 03-03-2023 05:33:09pm
சொத்திற்காகவும் பணத்திற்காகவும் பெற்ற தாயை கார் ஏற்றி கொலை செய்த கொடூர மகன்

உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தம்பி சிகிச்சை பெற்று வரும் சூழலில், அண்ணனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


தென்காசி மாவட்டம், செங்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட அச்சன்புதூர் பகுதியை சேர்ந்தவர் சங்கரநாராயணன். இவரது மனைவி முருகம்மாள் (வயது 67). இந்த தம்பதியினருக்கு மூன்று மகன்கள் உள்ள சூழலில், சங்கரநாராயணன் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இலத்தூர் விளக்கு பகுதியில் ஒரு விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பான வழக்கு தற்போது, தென்காசி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சூழலில், இன்று முருகம்மாளும் அவரது இளைய மகனான உதயமூர்த்தி(38) என்பவரும் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் அவரது கணவர் விபத்து தொடர்பான வழக்கில் ஆஜராக தென்காசி நீதிமன்றத்திற்கு சென்று கொண்டிருந்துள்ளனர்.

 அப்பொழுது, அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளின் பின்பக்கமாக கார் ஒன்று வேகமாக மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தில், முருகம்மாள் மற்றும் உதயமூர்த்தி ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த நிலையில், முருகம்மாள் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

 அதனைத் தொடர்ந்து, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்த உதயமூர்த்தியை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த இலத்தூர் போலீசார் முருகம்மாளின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு போலீசார் விசாரணை நடத்திய போது, முதற்கட்ட விசாரணையில், உதயமூர்த்தியும், முருகம்மாளும் சென்ற மோட்டார் சைக்கிளானது விபத்தில் சிக்கவில்லை எனவும், திட்டமிட்ட கொலை என்பதும் தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து, முருகம்மாளை கொலை செய்யும் நோக்குடன் காரை வைத்து இடித்தது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது, முருகம்மாளுக்கும், அவரது மூத்த மகனான மோகன் என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாக சொத்து பிரச்சினை இருந்து வருவதும், இது தொடர்பான வழக்கு செங்கோட்டை நீதிமன்றத்தில் நடந்து வருவதும் தெரிய வந்துள்ளது.

மேலும், முருகம்மாளின் கணவரான சங்கரநாராயணன் விபத்தில் உயிரிழந்த சம்பவத்தில் முருகம்மாளுக்கு கிடைக்கப்பெற்ற விபத்து நஷ்டஈடு தொகையையும் கேட்டு முருகம்மாளிடம், அவரது மூத்த மகன் மோகன் கடந்த சில நாட்களாக பிரச்சனையில் ஈடுபட்டு வந்ததும், இதற்கு முருகம்மாள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து மோகனுக்கு சொத்தும் கிடையாது, பணமும் கிடையாது என அவரை புறந்தள்ளியதால் ஆத்திரமடைந்த மோகன் இன்று உதயமூர்த்தியும், முருகம்மாளும் சென்ற மோட்டார் சைக்கிள் மீது காரைக் கொண்டு இடித்து விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது.

 அதனைத்தொடர்ந்து, முருகம்மாளை கொலை செய்த அவரது மூத்த மகனான மோகன் மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி போலீசார் அவர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

 சொத்திற்காகவும், பணத்திற்காகவும் பெற்ற தாயை மகன் கார் ஏற்றி கொலை செய்த சம்பவம் தென்காசி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

 

Tags :

Share via