தொழிலதிபரை ஏமாற்றியவர்கள் கைது

by Staff / 11-03-2023 01:41:43pm
 தொழிலதிபரை ஏமாற்றியவர்கள் கைது

சென்னை முகலிவாக்கம் பகுதியை சேர்ந்த ராம்பாலாஜி ( 42) என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். இவர் தனது மனைவியை விவாகரத்து செய்து தனியாக உள்ளார்.இவர் கடந்த சில தினங்களுக்கு முன் மதுரையில் நடந்த நண்பரின் திருமணத்தில் பங்கேற்றார். அங்கு வந்திருந்த வித்யாஸ்ரீ (31) என்ற பெண்ணிடம் அறிமுகமாகி பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து 2 பேரும் செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளனர். தானும் கணவருடன் விவாகரத்து பெற்று 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாக வித்யாஸ்ரீ தெரிவித்துள்ளார். நாம் இருவரும் 2-வது திருமணம் செய்து கொள்ளலாம் என வித்யாஸ்ரீ ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதற்கு அவர் சம்மதமும் தெரிவித்துள்ளார்.இதை பயன்படுத்தி அவரிடம் வித்யாஸ்ரீ அவ்வப்போது பணம் கேட்டுள்ளார். ராம்பாலாஜியும், வித்யாஸ்ரீயின் வங்கி கணக்கில் சிறிது சிறிதாக ரூ. 50 லட்சம் வரை பணம் அனுப்பியதாக தெரிகிறது. நேரில் சந்திக்கும்போது வித்யாஸ்ரீக்கு நகைகளையும் கொடுத்தும் உள்ளார்.ஆனால் திருமணம் குறித்து பேசும்போது வித்யாஸ்ரீ காலம் தாழ்த்தி வந்துள்ள நிலையில் கடந்த சில வாரங்களாக வித்யாஸ்ரீயை தொடர்பு கொள்ள முடியவில்லை. செல்போன் சுவிட்ஆப் செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து விசாரித்த போது வித்யாஸ்ரீ வாடகை வீட்டையும் காலி செய்து தலைமறைவானது தெரிந்தது. தன்னிடம் ரூ. 50 லட்சம் மற்றும் நகைகளை பெற்றுக் கொண்டு மோசடி செய்த வித்யாஸ்ரீ குறித்து அலங்காநல்லூர் போலீசில் ராம்பாலாஜி புகார் செய்தார்.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த வித்யாஸ்ரீ மற்றும் அவரது நண்பர் அஜித்குமார் ஆகிய இருவரையும் கையும், களவுமாக பிடித்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் ரூ. 50 லட்சம், நகை மோசடி செய்தது தெரியவந்தது. இதற்கு உடந்தையாக அஜித் குமாரும் இருந்துள்ளார் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

 

Tags :

Share via