நெல்லை மாவட்டத்தில் தொடரும் படுகொலைகள்  மக்கள் அதிர்ச்சி.

by Editor / 08-12-2023 07:22:52am
நெல்லை மாவட்டத்தில் தொடரும் படுகொலைகள்  மக்கள் அதிர்ச்சி.

நெல்லை மாவட்டம் கீழ முன்னீர்பள்ளம் பகுதியைச் சேர்ந்த  பேச்சி குட்டி என்பவரது மகன் வீரபுத்திரன் (28). இவர் லோடு ஆட்டோ மூலம் தண்ணீர் கேன் சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார்.  வழக்கம் போல் பணிகளை முடித்துவிட்டு வியாழன் இரவு முன்னீர்பள்ளம்  பஸ் ஸ்டாப் அருகே நண்பர்களுடன்  பேசிக்கொண்டு இருந்த நிலையில் திடீரென காரில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் வீரபுத்திரனை சரமாரியாக வெட்டி சாய்த்து தப்பிச் சென்று விட்டனர். இதில் வீரபுத்திரன் தலைப்பகுதியில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று  விசாரணை நடத்தினார். முன்னீர்பள்ளம் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து இந்த கொலை முன்விரோதம் காரணமாக  நடைபெற்றுள்ளதா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா.. என்பது குறித்தும் விசாரணை  செய்து வருகின்றனர். மேலும் சேரன்மகாதேவி,  அம்பை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டு விசாரணையை தீவிரப் படுத்தி உள்ளனர்.  மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.  மக்கள் நடமாட்டம் உள்ள திருநெல்வேலி அம்பாசமுத்திரம் பிரதான சாலையில் நடைபெற்ற இந்த கொலை சம்பவத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  

 

Tags : நெல்லை மாவட்டத்தில் தொடரும் படுகொலைகள்  மக்கள் அதிர்ச்சி.

Share via